சபரிமலை விவகாரம்.. பினராயி வீட்டின் முன் பாஜகவினர் போராட்டம் .. தடியடி
சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கேரளா முதல்வர் வீட்டின் முன் பாஜகவினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்: சபரிமலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கேரளா முதல்வர் வீட்டின் முன் பாஜகவினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அக்டோபரில் கோவில் சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்ட போது 8-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தார்கள். அப்போது உள்ளே பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதன்பின் கோவில் திறக்கப்பட்ட பின்பும் கூட பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பெண்களை கோவிலுக்கு அனுமதிப்பதற்கு எதிராக பாஜகவினர் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் அங்கு போராடி வருகிறார்கள்.
கைது செய்தனர்
இந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். சபரிமலை போராட்டத்தை கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் முன்னின்று நடத்தினார். அதனால் அவரும் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
பெயிலில் வந்தார்
இந்த நிலையில் இன்று அவருக்கு பெயில் கிடைத்தது. இன்று காலை கேரளா ஹைகோர்ட் அவருக்கு பெயில் வழங்கியது. 22 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் இன்று அவர் விடுதலை ஆனார்.
பெரிய போராட்டம்
இவர் வெளியே வந்த கையோடு திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் இல்லம் நோக்கி பாஜகவினர் பேரணி நடத்தினார்கள். முதல்வர் பினராயி விஜயன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் 400 பாஜகவினர் கலந்து கொண்டனர்.
போலீஸ் தடியடி
போராட்டத்தை தொடர்ந்து பாஜகவினர் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் போலீசார் பாஜகவினர் மீது தடியடி நடத்தினர். பின் கூட்டத்திற்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தற்போது சில பாஜகவின் இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.