சபரிமலை புண்ணியத்தால் கேரளாவில் பாஜக வளருகிறது... மோடி செல்வாக்கு சரிவு... இந்தியா டுடே சர்வே!
திருவனந்தபுரம்:சபரிமலை விவகாரம் தொடர்ந்து கேரளாவில் பூதாகரமாகி வர, அம்மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு யாரும் எதிர்பாராத விதமாக உயர்ந்து உள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயதுப்பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.அதற்கு எதிராக கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற இளம் பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச்சென்றனர். அதே நேரத்தில் இரு பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் அய்யப்பனைத் தரிசனம் செய்தனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரும் சாமி தரிசனம் செய்தார்.
போராட்டங்கள் தீவிரம்
பெண்கள் சபரிமலைக் கோயிலுக்கு நுழைந்து சாமி தரினம் செய்ததை கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். போராட்டங்களில் வன்முறை வெடித்து, ஏராளமான பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு அதிகரிப்பு
கண்ணூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும் பதற்றம் நீடிப்பதால் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் இறங்கியுள்ளனர். மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும்மோதல் நிலவி வருகிறது.
பாஜக செல்வாக்கு உயர்வு
தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வரும் கேரளாவில் இந்தியா டுடே குழுமம் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி அடுத்தக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதில் சபரிமலை விவகாரத்துக்கு பிறகு, கேரளாவில் பாஜகவின் செல்வாக்கு 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக வளர்ச்சிக்கு அடித்தளம்
சர்வேயில் கருத்து தெரிவித்தவர்களில் 33 சதவீதம் பேர் கேரளாவில் தமது கட்சியின் வளர்ச்சிக்கு போதிய அடித்தளத்தை செய்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்பதை 42 சதவீதத்தினர் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு குறித்து கருத்து
இது தவிர, சர்வேயில் பங்கெடுத்தவர்களில் 23 சதவீதம் பேர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்றும், இது பாலின சமத்துவம் என்றும் அதனை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளனர். கடந்த அகடோபரில் பினராயி விஜயனின் அரசாங்கத்துக்கு இருந்த ஆதரவு, 42 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக குறைந்துவிட்டதாக அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிரான மனநிலையில் மக்கள்
ஊழல், வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றிலும் மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் சர்வேயில் சொல்லப்பட்டுள்ளது.
சரியும் மோடி, வளரும் ராகுல்
சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 41 சதவீதம் பேர் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.(இதுவே... கடந்த அக்டோபரில் 38 சதவீதமாக இருந்தது). மோடிக்கு 30 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்(இது... கடந்த அக்டோபர் மாதம் 31 சதவீதமாக இருந்தது).