உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல் முறை.. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
Recommended Video
திருவனந்தபுரம்: அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு முதல் முறையாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தீவிரமாக நடந்து வரும் அந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும்.
இந்த காலகட்டத்தில், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று நடை திறக்கப்பட்டதால், அங்கு நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண் பத்திரிகையாளர்களை கூட போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. இது குறித்து கேரள முதல்வர் பினரயி விஜயன் கூறியதாவது, நாங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்போம். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம். சபரிமலையின் பெயரில் வன்முறை ஏற்படுவதை என் அரசு அனுமதிக்காது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகு இன்று தான் முதல் முறையாக கோவில் நடை திறக்கப்படுவதால் பல பெண்களும் கோவிலுக்கு வர முற்பட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் அவர்களை திருப்பியனுப்பினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.