5 நாள் மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறப்பு
சபரிமலை கோயிலின் நடை இன்று திறக்கப்பட உள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைத்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பா் மாதம் தீா்ப்பு சொன்னது. இந்த தீர்ப்பை அடுத்து கேரள மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு முறை கோயில் நடை திறக்கப்படும் போதும், இளம்பெண்கள் உள்ளே நுழைய முயற்சிப்பதும், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடப்பதும் என்பதும் வாடிக்கையாகி விட்டது.
மண்டல பூஜை
எனினும் கோயிலுக்குள் இளம் பெண்கள் அனுமதிக்க எதிா்ப்பு தொிவித்து இன்னமும் அங்கு போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு பெற்று கடந்த மாதம் ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.
சிறப்பு பூஜைகள்
அதன் பின்னா் மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைத்தார். இன்றிலிருந்து வருகிற 17-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்றிரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். இந்த 5 நாட்களும் தினந்தோறும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்க இருக்கின்றன.
சிறப்பு ஏற்பாடு
பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து கோயிலுக்கு சென்று வர மாநில போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கோயிலுக்குள் சென்ற முறையை போலவே இம்முறையும் இளம் பெண்கள் வரலாம் என்பதால் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தடை உத்தரவு
அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், இன்று மாலை 5 மணி முதல் வருகிற 17ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் எஸ்பி நாராயணன் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டரை வலியுறுத்தியுள்ளார்.
கனகதுர்கா, பிந்து
இதை தவிர, மகர விளக்கு பூஜையின்போது கோயிலில் சாமி தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகியோர் திரும்பவும் சாமி தரிசனம் செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
பதற்றம்
இதனால் இவர்களுடன் சேர்த்து, 10 முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் கோயிலில் வழிபாடு செய்ய வரலாம் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளதால் பரபரப்பும் சேர்ந்தே அதிகரித்துள்ளது. அதனால் நடை திறப்பதற்கு முன்னமேயே சபரிமலையில் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.