பெண்கள் தரிசனத்தை அடுத்து பரிகார பூஜை.. சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டது!
சபரிமலை கோவிலுக்குள் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் நுழைந்ததை அடுத்த, கோவில் நடை திடீரென்று மூடப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் நுழைந்ததை அடுத்து, கோவில் நடை திடீரென்று மூடப்பட்டது. பரிகார பூஜை முடிந்து கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் நுழைந்து உள்ளனர். இவர்கள் கோவிலில் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால் தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இரண்டு பெண்கள்
மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண் மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண் ஆகியோர் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடைக்கப்பட்டது
இந்த நிலையில் சபரிமலைக்குள் இரு பெண்கள் நுழைந்ததை அடுத்து திடீரென நடை அடைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பக்தர்கள் எல்லோரும் தரிசனத்திற்கு பின் வெளியே அனுப்பப்பட்டனர். போலீஸார் உதவியுடன் பக்தர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.
போலீஸ் குவிப்பு
அதன்பின் மேல்சாந்தியுடன் தந்திரி ஆலோசனை நடத்தினார். கோவில் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நடை சாத்தப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவிலை சுத்தம் செய்வதற்காக கோவில் நடை சாத்தப்பட்டது. பந்தளம் ராஜா வம்சத்தை சேர்ந்த சஷி வர்மா கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால், கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் திறப்பு
இதையடுத்து பெண்கள் உள்ளே நுழைந்ததால், கோவிலை சுத்தம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. கோவிலை சுத்தம் செய்தபின் கோவிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது. தற்போது பரிகார பூஜை முடிந்து கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மீண்டும் வரிசையாக உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.