"கடைத் தெருவின் கதை சொல்லி.." புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் மறைந்தார்! கமல்ஹாசன் இரங்கல்
திருவனந்தபுரம்: சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஆ.மாதவன் மரணமடைந்தார், அவருக்கு வயது 86.
பல்வேறு எழுத்தாளர்களை ஈன்றெடுத்த, திருநெல்வேலி மாவட்டம்தான் ஆ.மாதவனுக்கும் பூர்வீகமாகும். ஆ. மாதவனின் தந்தையின் ஊர், முந்தைய நெல்லை மாவட்டம், இன்றைய தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை. தாயாரின் ஊர் நாகர்கோயில்.
1970களில் மாதவனின் முதல் நாவல், புனலும் மணலும் வாசகர் வட்டத்தால் வெளியிடப்பட்டது. இவரது கிருஷ்ணப் பருந்து எனும் நாவல் மிகவும் புகழ்பெற்றதாகும். தமிழில் வெளியான நாவல்களில் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கிருஷ்ணப் பருந்து நாவல் அழைக்கப்படுகிறது.
தூவானம் என்ற குறுநாவல் ஒன்றும் இவர் எழுதியுள்ளார். இதேபோன்று பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் மாதவன் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் உண்டு. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் கடை வைத்திருந்தார் மாதவன். எனவே அந்த வாழ்க்கை முறை, கடைவீதி பின்னணியில் பல்வேறு கதைகளை எழுதி இருந்தார். பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடாத ஒரு களமாக இது பார்க்கப்பட்டது.
எதுக்கு இன்னும் அழுகுணி ஆட்டம்.. பேசாம ஒத்துக்கிட்டு கிளம்புங்க டிரம்ப்.. பிடன் அட்வைஸ்!
2015 ஆம் ஆண்டு இலக்கிய சுவடுகள் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் மாதவன். திருவனந்தபுரம் நகரில் வசித்து வந்தார். மலையாளத்தில் இருந்து இரு நாவல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த நிலையில், மாதவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி." இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.