மருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்
திருவனந்தபுரம்: தலையில் அடிப்பட்டு சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற சசி தரூரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார்.
பலத்த காயம் பட்டு தலையில் 6 தையல்கள் போடப்பட்ட நிலையிலும், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்காமல் பிரச்சாரத்திற்கு வந்த சசி தரூரின் மனஉறுதியை பாராட்டுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தின் போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்த சசி தரூர், தலையில் காயம் பட்டிருந்த இடத்தை துணியால் மறைத்து மூடியபடி காட்சியளித்தார்
சசி தரூரை ஆதரித்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, சசி தரூர் தலையில் படுகாயமடைந்ததை கேள்விப்பட்டு தாம் மிகுந்த கவலையடைந்ததாக கூறினார். ஆனால் தற்போது காயத்திலிருந்து விரைவில் மீண்டு தேர்தல் களத்தில் அவர் செயல்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக ராகுல் தெரிவித்தார். இந்த சம்பவம் சசி தரூரின் மனஉறுதியை நமக்கு காட்டுகிறது என்றார்.
என்னை இழிவுப்படுத்துவதற்காக ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்பதா- ராகுல் காந்திக்கு மோடி கண்டனம்
காங்கிரஸ் தலைவராகிய நான் சொல்கிறேன், உங்களது பிரதிநிதியாக சசி தரூர் நாடாளுமன்றத்தில் மிக நன்றாக செயல்பட்டார். மக்கள் பிரதிநிதியாக மிகச்சிறப்பாக செயல்பட்ட இவர் உங்கள் மாநிலத்தின் விலைமதிக்க முடியாத சொத்து என புகழாரம் சூட்டினார்.
முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் எடைக்கு எடை வாழைக்குலையை துலாபாரம் கொடுத்த போது, சசி தரூர் தலையில் தராசு அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்தார்.
திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ,ஐசியூ-வில் வைத்து கண்காணிக்கப்பட்டார். அவரை நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து நேரில் நலம் விசாரித்தார்.அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சசி தரூர் மிக அரிதான பண்புகளை பெற்ற இந்திய அரசியல்வாதிக்கு உதாரணம் நிர்மலா என புகழாரம் சூட்டியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.