6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி!
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது 6 சயனைடு கொலைகள்.. இப்படி ஒரு கொடூரமான கொலைகாரியா? என அதிர வைக்கிறது ஜோலியின் நிஜமுகம்.. 17 ஆண்டுகளாக தப்பி ஜாலி வாழ்க்கையை அனுபவித்த ஜோலி சிக்கியது இப்படித்தான்...
கேரளா போலீசாரின் சரித்திரத்தில் அக்டோபர் 4 மிக முக்கியமான நாள்.. 17 ஆண்டுகால 6 மரணங்களின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்ட திருப்பத்துக்குரிய நாள். கோழிக்கோடு அருகே கூடத்தாய் எனும் இடத்தில் அத்தனை பயங்கரமான கொலைகளும் அரங்கேறி இருக்கின்றன.
கூடத்தாய் கிராமத்தைச் சேர்ந்த ராய் தாமஸுக்கும் ஜோலி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரோஜோ தாமஸ் என்ற மகன் உள்ளார்.
மாமனார் மாமியார் கொலைகள்
2002-ல் ராய் தாமஸின் அம்மா அன்னம்மா தாமஸ் மட்டன் சூப் சாப்பிட்ட உடன் இறக்கிறார். 2008-ல் ராய் தாமஸின் அப்பா டாம் தாமஸ் வாந்தி எடுத்த நிலையில் உயிரிழக்கிறார்.
கணவனை போட்டுத் தள்ளிய ஜோலி
2011-ல் ராய் தாமஸ், கழிவறையில் இறந்து கிடக்கிறார். மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக ஜோலி நாடகமாடினாலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் விசாரணை நடக்கவில்லை. 2014-ல் ராய் தாமஸின் மாமா மேத்யூ தமது வீட்டில் தனியாக இருந்தார். அவரது மனைவி வெளியூர் சென்றிருந்தார். அப்போது மேத்யூ இறந்து போகிறார். இந்த மேத்யூதான் ராய் தாமஸின் பிரேத பரிசோதனையை முன்வைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தவர். நல்ல ஆரோக்கியமாக இருந்த மேத்யூ மரணித்துப் போகிறார்.
ஒரே கல்லறையில் நல்லடக்கம்
2014-ல் ராய் தாமஸின் சித்தப்பா மகன் சாஜூவின் குழந்தை ஆல்பின் உயிரிழக்கிறார். பிரட்டும் ஆட்டு கறியும் சாப்பிட்ட பின் ஆல்பின் உயிரிழந்தார். 2016-ல் சாஜூவின் மனைவி ஷிலி, ஜோலியுடன் திருமண வரவேற்புக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில் இறந்துபோகிறார் இந்த மரணங்கள் அனைத்தும் இயற்கையானவையே என சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டு கூடத்தாய் செயின்ட் லூர்து தேவாலய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
ஓயாத ராய் தாமஸ் சகோதரர்
தற்போது ஜோலி, சாஜூவுடன் ஜாலியான உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் ராய் தாமஸின் சகோதரர் பிரேத பரிசோதனை அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடவில்லை. ஒவ்வொரு மரணத்திலும் ஏதோ மர்மம் இருப்பதாக ஆராய்ந்து பார்க்கிறார். அத்தனை மரணங்கள் நிகழ்ந்த போதும் ஜோலி உடன் இருக்கிறார் என்கிற தகவல் பெரும் சந்தேக வலையாக விரிகிறது.
துருவி துருவி விசாரணை
இம்மர்ம மரணங்கள் குறித்து போலீசார் மீண்டும் உரிய முறையில் விசாரிக்க கோருகிறார். கோழிக்கோடு புறநகர் எஸ்.பி. கேஜி சைமன் இவ்வழக்கை கையில் எடுத்த பின்னர் அதிரடி திருப்பங்கள் அரங்கேறுகின்றன. அக்டோபர் 4-ந் தேதி பெரும் போலீஸ் படை கூடத்தாய் தேவாலயத்துக்கு போகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அப்போது போலீசுக்கு கிடைத்த முதல் தகவல் போலி சான்றிதழ்கள் மூலம் அத்தனை உடல்களையுமே அடக்கம் செய்தது ஜோலிதான் என்பது. ஆனால் அத்தனை பேருமே உறவினர்கள்தான் என்பதால் தம்மை எப்படி சந்தேகிக்கலாம் என பிடிகொடுக்காமல் போகிறார் ஜோலி. இதனால் போலீசுக்கு பெரும் சவாலானது. ராய் தாமஸின் பிரேத பரிசோதனை அடிப்படையில் ஜோலியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
மேத்யூவிடம் விசாரணை
ஜோலியோ தாம் கொலையே செய்யவில்லை என பிடிவாதமாக இருந்துவிட்டார். அதே நேரத்தில் ஜோலியின் அத்தனை செல்போன் எண்களையும் ஆராய்ந்தது போலீஸ். அதில் சாஜியுடன் பலமணிநேரம் தொடர்ந்து ஜோலி பேசியிருக்கிறார். அத்துடன் போலீசாரின் சந்தேக வலையில் மேத்யூ உள்ளிட்ட 2 பேர் சிக்குகின்றனர். இவர்கள் நகைக் கடையில் தங்கத்தை உரசிப் பார்க்கின்றவர்கள். அங்கே பொறி தட்டுகிறது.. மேத்யூவை பிடித்து விசாரித்துக் கொண்டே ஜோலியிடமும் மேத்யூ பற்றி கேட்கிறது போலீஸ்.
திடீர் மாற்றங்கள்
மேத்யூவுக்கும் ராய் தாமஸுக்கும் முன்விரோதம் என கப்சா அடித்துவிடுகிறார் ஜோலி. ஆனால் ராய் தாமஸ் கொல்லப்பட்ட நாட்களில் மேத்யூ கேரளாவில் இல்லை என்பது உறுதியாகிறது. பின்னர் உண்மை கண்டறியும் சோதனைக்கு அழைக்கிறது போலீஸ். ஜோலியும் தாம் ரெடி என அசால்ட்டாக பதில் சொல்கிறார். அதையே எழுத்துப்பூர்வமாக எழுதித் தர சொல்கிறது போலீஸ். இதை ஏற்றுக் கொண்டு எழுதிக் கொண்டே இருந்த ஜோலி திடீரென பல சந்தேகங்கள் வருவதாக கூறி அந்த பேப்பரையே கிழித்து எறிகிறார்.
இப்படித்தான் கொன்றார் ஜோலி
இப்போதுதான் க்ளைமாக்ஸுக்கு வருகிறது போலீஸ். ராய் தாமஸ் மரணித்த நாளில் நீங்க மட்டும்தான் இருந்தீங்க.. அவர் மாரடைப்பால் இறந்ததா சொல்றீங்க.. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு இருந்தது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.. உங்களைத் தவிர வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது என திட்டவட்டமாக வளைக்க ஜோலி தப்பிக்க முடியாமல் திணறுகிறார். அவ்வளவுதான்... 17 ஆண்டுகால கொலைகள் அத்தனையும் அம்பலமாகிப் போனது. 6 கொலைகளையும் ஏன் செய்தேன்? எப்படி செய்தேன் என ஒவ்வொன்றாக விவரித்தார் ஜோலி. ஜாலியான வாழ்க்கைக்கு தடையாக இருந்தவர்கள், பெண் குழந்தைகள் மீது அதிகம் பாசம் வைத்தவர்கள், தம்மை சிக்க வைத்தவர்கள் என்கிற இந்த 3 கேட்டகிரியில்தான் 6 கொலைகளையும் செய்திருக்கிறார். அத்துடன் மேலும் 2 பெண் குழந்தைகளையும் கொலை செய்யவும் சதித் திட்டம் தீட்டியதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோலி.
2 பெண் குழந்தைகளுக்கு குறி
பெண் குழந்தைகள் என்ற காரணத்துக்காகவே அவர்களை படுகொலை செய்ய ஜோலி திட்டமிட்டிருக்கிறார் என்கின்றனர் போலீசார். கேரளாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது ஜோலியின் வாக்குமூலம்..அப்புறம் என்ன மலையாள திரையுலகத்துக்கு நல்ல திரைக்கதை கிடைத்துவிட்டது!