வங்கதேசத்தில் மோடி பேசிய பேச்சு... விமர்சனம் செய்த சசி தரூர்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார்!
திருவனந்தபுரம்: வங்கதேச சுதந்திர போராட்டத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆற்றி பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அந்த உரையை முழுமையாக பார்க்காமல் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் மோடி. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு ஏற்று இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று வந்தார்,
வங்கதேச தேசிய தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றும் போது " வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காக அந்நாட்டு சகோதர சகோதரிகளுடன் நின்ற இந்திய ராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு இன்று நான் மரியாதை செலுத்துகிறேன். வங்கதேசத்திற்கான விடுதலைப் போரில் பங்கேற்ற பல இந்திய வீரர்கள் கலந்து கொண்டதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

வங்கதேச சுதந்திரம்
எனக்கு 20 - 22 வயது இருக்கும் என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு சென்றேன். வங்கதேசத்தில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்கள் நன்கு தெரியும். அந்த புகைப்படங்களால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை" என்று பேசியிருந்தார்.

மோடி மீது தாக்கு
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை விமர்சனம் செய்து ட்வீட் வெளியிட்ட திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் " நமது பிரதமர் வங்கதேசத்துக்கு இந்திய 'போலி செய்திகளை' பற்றி கூறுகிறார். அபத்தமானது என்னவென்றால், வங்கதேசக்கு விடுதலை வாங்கித்தந்தவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும்" என வெள்ளி அன்று இரவு கூறியிருந்தார்.

இந்திரா காந்தி
இருப்பினும் நேற்று தனது ட்வீட்டுக்காக மன்னிப்பு கோரி உள்ளார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் தவறு செய்யும்போது அதை ஒப்புக்கொள்வதை பற்றி எனக்கு கவலையில்லை. செய்திகளின் தலைப்புகளையும், சில ட்வீட்களை மட்டும் பார்த்துவிட்டு, வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த இந்திரா காந்தியின் பெயரை பிரதமர் மோடி குறிப்பிடவில்லை என்று நினைத்து அப்படி ஒரு பதிவினை ட்விட்டரில் பதிவிட்டுவிட்டேன். ஆனால் மோடி, இந்திரா காந்தியின் பங்களிப்பு குறித்து பேசியிருக்கிறார், மன்னித்துவிடுங்கள்!" என சசி தரூர் கூறியுள்ளார்..

பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி தனது உரையில், வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்கு இந்தியாவில் ஒவ்வொரு மூலை மூலையிலும், ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஆதரவு கிடைத்தது. பின்னர் பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசத்தின் சுதந்திரத்திறக்க எடுத்த முயற்சிகள் மற்றும் வங்க தேசத்தின் சுதந்திரத்தில் அவரது முக்கிய பங்களிப்பு அனைவரும் அறிந்த ஒன்று என கூறியிருந்தார்.