மூணாறு நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்த சோகம்!
இடுக்கி: இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த பெட்டிமுடி பகுதியில் நடந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணில் புதைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
கேரளாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கருப்பு வெள்ளி என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு கனமழை, நிலச்சரிவு, கோழிக்கோடு விமான விபத்து என சோகங்கள் வரிசைக் கட்டிக் கொண்டிருந்தன.
மூணாறுக்கு அருகில் உள்ள பெட்டிமுடி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு தேயிலை தோட்டத்தில் பலர் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர்.
முல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!!
மண்ணோடு புதைந்தவர்கள்
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் பெட்டிமுடி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களின் 25 வீடுகள் மண்ணோடு புதைந்தன. இந்த இயற்கைச் சீற்றத்தில் 80-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
12 பேர் மீட்பு
இந்த நிலையில் இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 47 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் வானிலை மாற்றங்களுக்கேற்ப மீட்பு படையினர் துரிதமாக செயல்படுகிறார்கள்.
உறவினர்கள்
கொரோனா விடுமுறைக்காக தந்தையை பார்க்க குழந்தைகள், உறவினர்கள், அங்கேயே தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களில் 19 பேர் மாணவர்களாவர். பெட்டிமுடியில் தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
மயக்கம்
வரும் சடலங்களை ஒரு பெரிய குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறார்கள். பல சடலங்கள் மோசமான நிலையில் உள்ளதால் அதை பார்க்கும் உறவினர்கள் சிலர் வேதனையால் மயக்கமடைகிறார்கள். இந்த நிலையில் மண்ணில் புதைந்தவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கயத்தாறு பகுதியிலிருந்து இங்கு பணிக்கு வந்தவர்களே ஏராளம் என சொல்லப்படுகிறது.