வடக்கே எங்க மொழிகளை படிக்கிறாங்களா? இந்தி திணிப்புக்கு எதிராக கொந்தளிக்கும் தென்னிந்தியா
திருவனந்தபுரம்: இந்தி மொழியை மத்திய பாஜக அரசு திணிப்பதற்கு தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசிடம் தமது பரிந்துரைகளை அளித்தது.
இப்பரிந்துரைகளை இணையத்தில் வெளியிட்டு பொதுமக்களிடத்தில் கருத்துகளை கேட்டிருக்கிறது. கஸ்தூரி ரங்கன் கமிட்டியானது இந்தியை திணிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது.
இவங்களும் இழுக்கறாங்க.. அவங்களும் இழுக்கறாங்க.. யார் பிளான் வெல்லப் போகுதோ!
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
இதனால் இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்கள் கட்டாயம் இந்தியை படித்தாக வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுவர். இது இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்கில் முதலிடம்
தமிழகத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு போர்க்குரல் எழுப்பியுள்ளன. சமூக வலைதளங்களில் இந்தி திணிப்பை எதிர்க்கும் ஹேஷ்டேக்குகள் சர்வதேச அளவில் டிரெண்டிங்காகின.
எங்க மொழியை படிக்கிறீங்களா?
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், தென்னிந்தியாவில் இந்தி படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறீர்கள்.. அப்படியானால் வட இந்தியாவில் மலையாளம், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளை கட்டாயமாக்குவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா முதல்வர் எதிர்ப்பு
இதேபோல் கர்நாடகா முதல்வர் குமாரசாமியும் இந்தி மொழி திணிப்பை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் எந்த ஒரு மொழியையும் பிற மாநிலங்கள் மீது திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். அதே நேரத்தில் கர்நாடகா பாஜக தலைவர் தேஜஸ்வி சூர்யா, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து தொடர்ந்து ட்வீட்டுகளைப் போட்டு வருகிறார்.
மகாராஷ்டிராவிலும் காட்டம்
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் மூத்த தலைவர் அனில் சிதோர கூறுகையில், இந்தி எங்களது தாய்மொழி அல்ல. அதை எங்கள் மீது நீங்கள் திணிக்காதீர் என கடுமையாக எச்சரித்துள்ளார். ஒட்டுமொத்த தென்மாநிலங்களுமே இந்தி திணிப்பை வரிந்து கட்டு எதிர்க்கின்றன. கடந்த காலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமே தீரத்துடன் போராடியது.. இப்போது இந்தி பேசாத அத்தனை மாநிலங்களுமே தமிழகத்துடன் கை கோர்த்துள்ளன.
இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்
தமிழகமானது 1937 முதல் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1965-ம் ஆண்டு 23 நாட்கள் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர், உலகிலேயே தாய்மொழிக்காக நடத்தப்பட்ட உச்சகட்ட போராட்டம். தாய்மொழி காக்க தங்களை தாங்களே தீயிட்டு அழித்தும் விஷம் குடித்தும் மாண்டு போயினர் தமிழ் இளைஞர்கள், துப்பாக்கிச் சூட்டில் அண்ணமலை பல்கலைக் கழக மாணவர் ராசேந்திரன் மாண்டு போனார் என்பது வரலாறு.