தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்.... வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 8-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் 6-ந்தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருகிற 8-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வீசும் காற்று தென் திசை நோக்கி நகரும் எனவும், அவ்வாறு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் கேரள மாநிலத்தில் வரும் ஜூன் 8ம் தேதியன்று தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய கன மழை
மேலும், தற்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மேகக்கூட்டங்கள் நகர்ந்து செல்வதாகவும், பருவமழைக்கான மேகக்கூட்டங்கள் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கும் எனவும் எச்சரித்துள்ளது.
தொடங்க வாய்ப்பு
இதேபோல தெற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வருகிற 8-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதற்கான சாதகமான சூழ்நிலை இப்போதை தென்பட தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மழை குறைவாக இருக்கும்
கடந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பை விட 23 சதவீதம் அதிகமான மழை அங்கு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்தநிலையில், இந்தாண்டு மழை கேரளாவில் இயல்பை விட குறைவாகவே பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எதிர்பார்ப்பு
தமிழகத்தில் தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிக்கிறது. குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை பொதுமக்களும், விவசாயிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மக்கள் நம்பிக்கை
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து, அதையொட்டியுள்ள தமிழக பகுதிகள் பயன் பெறும். முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளும், குமரி மாவட்டத்தின் நீராதாரங்களும் தென்மேற்குப் பருவமழையால் பயன்பெறும். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சராசரியை விட குறைவாகவே மழை பதிவாகும் நிலையில், இந்தாண்டு, மாற்றம் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.