மனிதர்களை மதிக்கும் மகான்.. டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்து வணங்கிய எஸ்பிபி.. வைரலாகும் வீடியோ
திருவனந்தபுரம்: தன்னை டோலியில் சுமக்கும் மனிதர்களையும் மனிதராக மதித்து எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது ஒவ்வொருவரின் காலில் விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
பிறப்பு முதல் இறப்பு வரை இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதுதான் முக்கியமே. என்னதான் பணம், புகழ், பெயர் என விண்ணை தொட்டாலும் அடக்கம், முன் கடந்து வந்த பாதையை யாரும் மறக்கக் கூடாது என்பது முக்கியமானது.
அதிலும் சக மனிதர்களை மனிதர்களாக நினைக்கும் மனிதநேயம் வெகு சிலருக்கே இருக்கும். என்னதான் பெயரும், புகழும் பணமும் கண்ணை மறைத்தாலும் மனிதநேயத்தை மட்டும் ஒருவர் இழக்கக் கூடாது.
ரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்!
புகழின் உச்சம்
அந்த வகையில் திரைத்துறையில் நேற்று மறைந்த எஸ்பிபி உலகளாவிய புகழை பெற்றிருந்தாலும் எளிமையின் சிகரமாக இருந்தார் என அவருடன் பழகியவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்கள். புகழின் உச்சத்தில் இருந்த போதும் சரி தன்னுடன் பாடுபவர்கள் புதியவர்களோ அறிமுகமில்லாதவர்களோ பிரபலமடையாதவர்களோ இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர் கொடுக்காமல் இருக்க மாட்டார்.
ஆர்கெஸ்டிரா
எந்த கச்சேரிக்குச் சென்றாலும் அங்கு வாசிக்கும் ஆர்கெஸ்டிராவில் இருப்போருக்கு உரிய மரியாதையை கொடுப்பார். அது போல் அவர்களது பெயரையும் உச்சரிப்பார். தான் பாடி முடித்தவுடன் ரசிகர்கள் கைதட்டல்களை முடித்த பின்னர், அந்த ஆர்கெஸ்ட்டிராவும் நன்றாக வாசித்தார்கள். அவர்களையும் பாராட்டுங்கள் என கேட்பாராம்.
பொறாமை
போட்டி, பொறாமை இல்லாமல் தனக்கு கிடைக்க வேண்டிய சான்ஸ்களையும் விட்டுக் கொடுப்பாராம். இசை கேசஸ்ட்டுகளில் தனது பெயர் இடம்பெறாவிட்டாலும் அதற்காக கோபித்து கொள்ளாத எளிமையான மனிதர் என அனைவரும் புகழாரம் சூட்டுகிறார்கள். நுங்கம்பாக்கத்திலும் தாமரைப்பாக்கத்திலும் அவருக்காக குவிந்த கூட்டம் அவரது பாட்டுக்கு மட்டுமல்ல மனித நேயத்திற்காகவும்தான் என்பது கண்கூடு.
பானை
எஸ்பிபியின் குணாதிசயம் குறித்து அனைவரும் கூறி வரும் நிலையில் அதற்கு ஒரு சான்றாக ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப அந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோ எஸ்பிபியின் சபரிமலை கோயில் பயணம் என்கிறார்கள்.
டோலி ஊழியர்கள்
ஆனால் அதுதான் என உறுதியாக தெரியவில்லை. தன்னால் ஏற முடியாததால் டோலியில் செல்ல முடிவு செய்த எஸ்பிபி தன்னை சுமக்கும் டோலி ஊழியர்களின் காலில் விழுந்து வணக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அது போல் தனது மகன் சரணையும் அவ்வாறு காலில் விழுமாறு சொல்கிறார்கள். மனிதர்களை மதிக்கும் மகான் என புகழாரம் சூட்டுகிறார்கள். காசு கொடுக்கிறோம் தூக்குகிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் அவர்களும் மனிதர்களே என நமக்கு உணர்த்தியவர் பாடும் நிலா பாலு!