சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படி ஏறிச் சென்று தரிசனம் செய்த முதல் பெண் சசிகலா!
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலையில், 18 படிகளை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்த முதல் இளம்பெண் என்ற பெயருக்கு உரித்தாக்கி உள்ளார் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா.
சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்துக்கு செல்வதற்கு இருமுடி கட்டி விரதம் இருந்து 18 படிகளை ஏறி செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
ஆனால் இவ்வாறு தரிசனம் செய்வதற்கு, 10 வயது முதல் 50 வயது வரையிலான, இளம் வயதில் உள்ள பெண்களுக்கு மட்டும், அனுமதி கிடையாது.
ஆனால் எல்லா வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் சில மாதங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பெண் பக்தர்கள் முயற்சி
அதில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் ஐயப்பன் சன்னிதிக்குச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் பக்தர்களின் போராட்டம் காரணமாக அவர்களால் 18 படி ஏறி ஐயப்பன் தரிசனம் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை நேரத்தில் பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய 40 வயதுக்கு மேற்பட்ட இரு பெண்கள், ஐயப்பன் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்தனர்.
இரு பெண்கள் தரிசனம்
இருப்பினும், அவர்கள் 18 படி வழியாக ஏறிச் சென்று தரிசனம் செய்யாமல், போலீஸ் பாதுகாப்புடன் பின்வாசல் வழியாக ஐயப்பன் சந்நிதிக்கு சென்றனர். இந்த நிலையில் 46 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்மணி சசிகலா என்பவர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி விரதம் இருந்து கோவிலுக்கு வந்திருந்தார்.
படியேறி தரிசனம்
அவர் இன்று 18 படிகள் வழியாக சென்று ஐயப்பன் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்மூலம் 18 படிகளை ஏறிச் சென்று ஐயப்பன் சந்நிதிக்கு சென்ற 50 வயதிற்கு குறைவான முதல் பெண் என்ற பெயர் சசிகலாவுக்கு கிடைத்துள்ளது.
சசிகலா
சசிகலாவை பார்க்க 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போல தோற்றமளித்ததால் அவரை பக்தர்கள் தடுக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால், இதன்பிறகு சசிகலாவிற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை விமர்சனம் செய்த சசிகலா, தன்னை தடுத்தவர்களை ஐயப்பன் பார்த்துக்கொள்வார் என பேட்டியளித்தார். இருப்பினும், அவர் தரிசனம் செய்துவிட்டது சிசிடிவி காட்சிகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.