இபாஸ் இல்லாமல் எல்லையில் குழந்தைகளுடன் தவித்த கேரள மக்கள்... விதிகளை தளர்த்தி அனுப்பிவைத்த தமிழகம்
திருவனந்தபுரம்: தமிழக எல்லை வழியாக கேரளாவிற்குள் வருவதற்கு தமிழக அரசு வழங்கும் அனுமதி சீட்டும் கட்டாயம் என்று திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் விளக்கமளித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தோர் கேரள மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு வாங்கி மாநில எல்லையான இஞ்சி விலாவை நேற்று அடைந்தனர் .
ஆனால் தமிழக போலீசார் அவர்களை கேரள எல்லைக்கு செல்ல அனுமதிக்க மறுத்தனர். குழந்தைகள் , பெண்கள் உள்பட 50 பேரும் எல்லையிலேயே பல மணி நேரமாக தவித்தனர். அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் இ பாஸ் வாங்கி இருப்பதை கூறி அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
ஆனால் தமிழக காவல்துறை அதிகாரிகள் தமிழகத்திலும் கட்டாயம் நீ பாஸ் வாங்கி இருக்க வேண்டுமென்று அவர்களிடம் வலியுறுத்தினர். மேலும் இ பாஸ் வாங்கும்படி அவர்களை வற்புறுத்தினர் . இதனால் அவர்கள் எல்லையைக் கடந்து தங்கள் சொந்த மாநிலமான கேரளாவிற்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் தவித்தனர் .
இதற்கிடையில் எல்லையில் தவித்த கேரளாவைச் சேர்ந்த 50 பேரை கேரளாவுக்கு திருப்பி அனுப்ப தமிழக அரசு விதிகளை தளர்த்தி அனுமதித்த பின்னரே செவ்வாய்க்கிழமை இஞ்சிவிலாவில் உள்ள கேரள-தமிழ்நாடு எல்லையில் பல மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட கனிமொழி வலியுறுத்தல்
இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள திருவனந்தபுரம் கலெக்டர் , கேரளா மற்றும் தமிழக எல்லையை கடந்து செல்வதற்கு சொந்த மாவட்ட பாஸ் மட்டுமில்லாமல் தமிழக அரசு வழங்கும் அனுமதி சீட்டு கட்டாயம் என்றார்.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு போக்குவரத்து பாஸ் தேவையில்லை என்று கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் மு. வடநரே தெரிவித்தார். இருப்பினும், மற்ற மாவட்டங்களிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கி கன்னியாகுமரி வழியாக பயணிப்பவர்களுக்கு இ பாஸ் ஆவணம் கட்டாயமாகும் என்றார்.