வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய பெண்கள் முயற்சி... 5 பேர் அதிரடி கைது
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய திருப்பூரில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீலாதேவி, காந்திமதி, ரேவதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனுமதிக்க வேண்டும்
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, போலீஸ் பாதுகாப்புடன் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
அர்ஜுன் சம்பத் விளக்கம்
வாவர் மசூதிக்குள் பெண்கள் நுழைய முயன்றது ஏன்? என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விளக்கமளித்துள்ளார். அதில், சபரிமலை புனிதம் காக்க வேண்டும். அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல், மசூதிக்குள் செல்ல அனுமதிக்காமல் பெண்கள் உரிமையை நிலைநாட்ட மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறினார்.
இரட்டை வேடம்
பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு மறு கண்ணுக்கு வெண்ணெய் என்பது போல் உள்ளது. இந்துகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மசூதியை இழிப்படுத்தாவோ, இஸ்லாமியர்களை புண்படுத்தவோ வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள ஒரு தலைபட்சமான நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
பதவி விலக வேண்டும்
முன்னதாக, சபரிமலையில் பெண்களைக் அனுமதித்த கேரளா அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சபரிமலை கோவிலின் புனிதத்தைக் கெடுத்த பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் எனவும் சபரிமலை விவகாரம் தொடர்பாக, தொடர் போராட்டங்களைக் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.