சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய தமிழக பக்தை முயற்சி... மீண்டும் பரபரப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி செய்ததால், அங்கு மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநில அரசின் பாதுகாப்போடு சில பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இது வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைவதற்கு, இந்து அமைப்பினர் தொடர்ந்து, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
இதே போல், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வைகாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை நடை செவ்வாய் கிழமை திறக்கப்பட்டது. இதனையொட்டி, பக்தர்கள் சென்று வரும் நிலையில், சபரிமலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நுழைய முயற்சி செய்தனர்.
பிரதமர் மோடியின் பேட்டியை டிவியில் பார்த்து உடனுக்குடன் கமெண்ட் கொடுத்த ராகுல் காந்தி
அங்குள்ள பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பால் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு திரும்பினர். மகளிர் கோவிலுக்கு செல்ல மீண்டும் முயன்றதால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயிலுக்கு வந்த ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.