சபரிமலையில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்... இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!
Recommended Video
நிலக்கல்: சபரிமலை விவகாரம் சம்பந்தமாக கேரளாவில் முழு அடைப்புக்கு பாஜக இன்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழக- கேரளா எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நிலையில் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று நடை திறந்த நிலையில் பெண் பக்தர்களை சபரிமலையை காப்போம் என்ற கருத்துடைய பல்வேறு அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். மேலும் கல்வீச்சு உள்ளிட்ட கலவரங்களிலும் அவர்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நீடித்ததை அடுத்து 144 தடை உத்தரவு போடப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜக உட்பட ஐயப்பன் சேவா சங்கத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்தும் இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளா செல்லும் அரசு பேருந்துகள் தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தபட்டுள்ளன. மேலும் பாறசாலை பகுதியில் கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன.