ஷாபு வீட்டுக்கு விடியக்காலையில் வந்த விருந்தாளி, விக்கி திக்கி நின்ற குடும்பம்.. அதிரப்பள்ளி ஷாக்!
திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வீட்டு வாசலில் அதிகாலையில் வந்து நின்ற முதலையால் வீட்டில் உள்ளவர்கள அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். விரட்ட முயன்ற போது, தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக ஆற்றின் ஓரங்களில் குடியிருப்போர், பாம்பு, பூச்சி உள்ளிட்ட விலங்குகளால் ஆபத்தை அதிகம் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேநேரம் எந்த நேரமும் நீரோட்டம் உள்ள ஆறுகள் என்றால் வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் உள்ளது.
அப்படித்தான் கேரளாவில் திருச்சூர் மாவட்டம் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் முதலையால் வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் வனத்துறையை அழைத்ததால் தப்பினர். அதேநேரம் ஆபத்து அவர்களை தொடர்கிறது என்பது உண்மை.
திருச்சூர்
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளியில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சியாகும். இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இந்த நீர் வீழ்ச்சியில் தான் பிரபல திரைப்படங்கள் பல எடுக்கப்பட்டிருக்கிறது. ‘புன்னகை மன்னன்', ராவணன், ஏய், செம்பருத்தி உட்பட பல தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளது.
விரட்ட முயற்சி
இந்த அருவியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஷாபு என்பவரின் வீடு உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் முன் வினோத சத்தம் ஒன்று கேட்டது. இதையடுத்து ஷாபுவின் மனைவி சாபியா கதவை திறந்து பார்த்தார். அப்போது, வீட்டு முற்றத்தில் மெகா சைஸ் முதலை இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து பயத்தில் அலறியடித்து வீட்டுக்குள் ஓடி கணவரிடம் கூறினார். ஷாபு வெளியே வந்து முதலையை விரட்ட பார்த்திருக்கிறார்.
வீட்டுக்குள் வந்தது
ஆனால் , அது பயப்படாமல் ஷாபுவை தாக்க பாய்ந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து முதலையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், வீட்டில் வந்து சோபாவுக்கு அடியில் அது ஒளிந்து கொண்டது. வனத்துறையினர் தீப்பந்தம் கொளுத்தி காண்பித்து முதலை வெளியே வந்தது. மேலும், களைப்படைந்ததால் நகர மறுத்தது.
ஆற்றில் முதலை
இதையடுத்து, கயிறு கட்டி முதலையை பிடித்து அருவியை ஒட்டியுள்ள ஆற்றில் கொண்டு விட்டனர். முதலை வந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிகம் குளிக்கும் இடம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒருபுறம் எனில் , ஷாபுவின் இரண்டரை வயது மகன் வீட்டுமுன் எப்போதும் விளையாடுவது வழக்கமாம். அதிகாலையில் முதலை வந்ததால் விபரீதம் நடக்கவில்லை.