இந்த மாஸ்க் போட்டுக்கிட்டா ‘அதே கண்கள்’ பிரச்சினை ஏற்படாது.. யாரும் ஓடவும், ஒளியவும் முடியாது!
நிஜ முகம் தெரியும் வகையில் புதுமையான முக கவசம் செய்து அசத்தியுள்ளது கேரள ஸ்டுடியோ ஒன்று.
திருவனந்தபுரம்: கொரோனா கைங்கரியத்தால் முகமூடி மனிதர்களாய் மாஸ்க் சகிதம் சுற்றித் திரிந்தாலும், இனி சுலபமாக மக்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் புதுமையான 3டி மாஸ்க் தயாரித்துள்ளது கேரள ஸ்டுடியோ ஒன்று.
நிஜ முகங்களே மறந்து போகும் அளவிற்கு இன்று முகமூடி மனிதர்களாய் மாறி விட்டோம் நாம். இந்தியா மட்டும் என்றில்லை, கொரோனாவால் உலகமே இன்று மாஸ்க் சகிதமாய் தான் பொது இடங்களில் சுற்றி வருகிறது.
நமக்கு நன்றாக தெரிந்த, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அருகில் நின்று கொண்டிருந்தால்கூட அவர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு நிலை மாறி விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் அதே கண்கள் படத்தில் வருவது போல, இனி மாஸ்க்கை வைத்து மூக்கு, வாயைப் பொத்தி விட்டு கண்களைப் பார்த்து தான் மக்களை அடையாளம் காண முடியும் போல.
எக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்?
சரி முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்றால், கொரோனா பயத்தோடு, அபராத பயமும் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே அசௌகரியங்கள் இருந்தாலும் மக்கள் முகமூடி மனிதர்களாகவே வலம் வருகின்றனர்.
புதுமையான மாஸ்க்
இந்தச் சூழ்நிலையில் தான், தேவை தான் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம் ஆகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் கேரளாவில் இந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கொண்டு வந்து விட்டனர். ஆம், அம்மாநில கோட்டயம் பகுதியில் உள்ள ஏட்டுமனூரை சேர்ந்த வினிஸ் என்பவர் தனது டிஜிட்டல் ஸ்டுடியோவில் நிஜ முகம் தெரியும் வகையில் புதுமையான முக கவசம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
3டி பிரிண்ட்
டி-ஷர்ட்களில் பிரிண்ட் செய்வது போலவே மாஸ்க்குகளிலும் நாம் கேட்டால், நமது முகத்தை 3டி முறையில் முக கவசத்தில் பிரிண்ட் செய்து தருகின்றனர். வாடிக்கையாளர்களின் முகத்தின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மட்டும் பிரிண்ட் செய்து தருவதால், சம்பந்தப்பட்டவர்கள் முக கவசம் அணியும்போது பாதி முகம் மறையும் பிரச்சனை இல்லை.
கட்டாயம்
தற்போது இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு நடந்து வருகிறது. மே 31க்குப் பிறகு மேலும் ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் கொரோனோவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என மத்திய அரசே சொல்லி விட்டதால், இனி நாம் மாஸ்க்கோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகி விட்டது.
டிரெண்டிங்
இதனாலேயே இந்த புதுமையான முயற்சிக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 15 நிமிடங்களில் இந்த முக கவசத்தை தயாரித்து தந்து விடுகின்றனர். விலையும் குறைவு தான். 60 ரூபாய் கட்டணத்தில் ஒரு மாஸ்க் செய்து தருகிறார்கள். இந்த வித்தியாசமான முக கவசம் சமூகவலைதளங்களிலும் இப்போது பெருமளவில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது.
வரவேற்பு
இந்த மாஸ்க்கை மாட்டிக் கொள்வதால், மற்றவர்களுக்கும் நமது முகம் பளிச்சென தெரியும் என்பதால், மக்கள் விரும்பி இது போன்ற மாஸ்க்குகளை வாங்கிச் செல்கின்றனர். விரைவில் இந்த மாதிரியான மாஸ்க்குகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.