முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை
கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்துள்ளதால் அணை தண்ணீரை படிப்படியாக திறக்கக்கோரி கேரளா அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு தண்ணீரை
படிப்படியாக வெளியேற்றும்படி தமிழக அரசுக்கு கேரளா அரசு கடிதம் எழுதியுள்ளது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது, இடுக்கி மாவட்டத்தில் கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 21 அடி உயர்ந்து தற்போது 136 கனஅடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் வேகம் அதிகரி்த்து இருப்பதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கரிங்குள் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மிகக்கனமழையால் அணை நீர்மட்டம் இரண்டு நாட்களில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 136அடியை எட்டியுள்ளது.
இதனால் இடுக்கி மாவட்டத்தின் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களுக்கு முதல்கட்ட எச்சரிக்கையை இடுக்கி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார். இந்த நிலையில் கேரள அரசின் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா, தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கே. சண்முகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் மழையின் தீவரம் அதிகமாக இருக்கிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் வேகம் அதிகரி்த்து இருப்பதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த 3-ம் தேதி 112 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 7ஆம் தேதி 131.25 அடியை எட்டிவிட்டது.
தற்போது 136 அடியாக அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கட்டப்பணை பொதுப்பணித்துறை பொறியாளர் அளித்த தகவலின்படி, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரியாறு அணையில் இருந்து 1,22,000 கனஅடி நீர் திறக்க முடியும். கடந்த 2018ம் ஆண்டில் 23 ஆயிரம் கனஅடி வினாடிக்கு திறந்தபோது, பெரும் சேதம் கேரளப்பகுதியில் ஏற்பட்டது.
ஆதலால் இப்போது இருந்தே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு தண்ணீரை படிப்படியாக வெளியேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.அதுமட்டுமல்லாமல் கேரளப் பகுதிக்குள் நீரைத் திறக்கும் முன் 24 மணிநேரத்துக்கு முன்பாக அறிவிப்புச் செய்ய வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்!
தேனிமாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு பேசி, பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் 24 மணிநேரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டேன். இடுக்கி மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
குறைந்தபட்சம் 2 மணிநேரமாவது மக்களை வெளியேற்ற நேரம் தேவை. அடுத்த இரு நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்பதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.