நிலைமை மோசமாகிறது.. கேரளாவில மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. 16 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது. மேலும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அங்கு 16 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 4716 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று மதியம் நிலவரப்படி 73 பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதிகபட்சமாக கேரளாவில் தான் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஏராளமானோர் இந்தியா முழுவதும் தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சோதனை முடிவுகள் வெளியானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகும் அச்சம் உள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக இறங்கி உள்ளன. கேரளாவில் இன்று மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருச்சூரில் ஒருவருக்கும் கண்ணூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்று பினராயி விஜயன் கூறினார். இதன் மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது,
கேரளாவில் கொரோனா வைரஸ் இந்த அளவுக்கு பரவ பத்தினம்திட்டாவைச் சேர்ந்த ஒரு தம்பதி காரணம் என்று கூறப்படுகிறது. இத்தாலி சென்றதை மறைத்த அந்த தம்பதி மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள மறுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பல இடங்களுக்கு சென்று வந்ததால் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. அவர்கள் யாருடன் அதிக நெருக்கமாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் கண்காணிப்பு வளைத்தில் கொண்டு வந்து கேரள அரசு சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கேரளாவில் தான் அதிகபட்சமான பாதிப்பு கொரோனாவால் ஏற்ப்ட்டுள்ளது. இங்கு பறவை காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.