முல்லைப் பெரியாறு அணை.. தமிழக - கேரள முதல்வர்கள் டிசம்பரில் முக்கிய மீட்டிங்.. வெளியான பரபர தகவல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் வரும் டிசம்பரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணையே விளங்குகிறது.
திடீருன்னு அதிரடி காண்பிக்கும் பாகிஸ்தான் டீம்.. வரிசையாக வெற்றிகள்.. பின்னணியில் 6 காரணங்கள்!
சுமார் 155 அடி உயரம் கொண்ட இந்த அணையில் கேரளாவில் அமைந்திருந்தாலும் கூட தமிழ்நாடு அரசு சார்பிலேயே இந்த அணை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
கேரளா மழை
கேரளாவில் கடந்த சில வாரங்களாகவே அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளும் படுவேகமாக நிரம்பி வருகிறது. இந்தச் சூழலில் சுமார் 126 ஆண்டுகள் பழைமையான முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் உடைய வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரவி வருகின்றன.
பரவும் தகவல்
இதுமட்டுமின்றி சில கேரள அரசியல்வாதிகளும், பிருத்விராஜ், உன்னிமுகுந்தன் போன்ற நடிகர்களும் கூட முல்லைப் பெரியாறு அணையை அகற்றிவிட்டு, அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் தமிழ்நாடு மற்றும் கேரள உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கேரளாவில் நடைபெற்றது.
டிசம்பரில் சந்திப்பு
இந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக வரும் டிசம்பர் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாகக் கேரள முதல்வர் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகளவில் தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்தால், 24 மணி நேரத்திற்கு முன் தங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதாகவும் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார்.
யாரெல்லாம் பங்கேற்பு
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் சூழலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் இரு மாநில மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழமையான
1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட, மிகவும் பழமையான அணைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை, உடையும் அபாயம் உள்ளதாகவும் இதனால் சுமார் 35 லட்சம் மக்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கேரளா தொடர்ந்து கூறி வருகிறது. இதற்குப் பழமையான அணைகள் ஏன் ஆபத்தானவை என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக் கழக அறிக்கை கேரளா மேற்கோள்காட்டுகிறது.
அணை பாதுகாப்பு
அதேநேரம் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய மூவர் குழு மற்றும் ஐவர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இரு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த குழுவினர் அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.