சபரிமலையில் மீண்டும் சர்ச்சை… இரண்டு இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
Recommended Video
திருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயிலுக்கு வந்த ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசின் பாதுகாப்போடு சில பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இது வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கேரளாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மற்றும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் அங்கு இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.அவர்களை ஐயப்ப பக்தர்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துவதால் சபரிமலையில் பரபரப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில், தற்போது பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலைக்கு சென்றது. அந்த குழுவில் இளம்பெண்கள் இருவர் வந்து இருந்தனர்.
இளம்பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார்கள். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலைக்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சென்று வருவதால் சபரிமலையின் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.