சட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்
திருவனந்தபுரம்: கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோத படகு பயணம் செய்த 243 பயணிகளின் நிலை என்ன என தெரியாமல் குடும்பத்தினர் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.
எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு சிரஞ்சீவ், ஜெகதீஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கஸ்தூரியின் கணவருக்கு மனநிலை சரியில்லை.
டெல்லியில் அம்பேத்கர் நகர் காலனியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்ட கருப்பசாமி கோயிலுக்கு கஸ்தூரி அவ்வப்போது சென்று அழுது கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் ஜனவரி 12-ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் கஸ்தூரியின் வாழ்க்கையே புரட்டி போட்டுவிட்டது.
243 பேர் பயணம்
அது என்னவென்றால், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியிலிருந்து 2,2670 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் காலனிக்கு தேவமாதா எனப்படும் மீன்பிடி படகில் 243 பேர் பயணம் செய்துள்ளனர்.
150 நாட்கள்
இவர்களுள் 243 பேர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர்கள். இதில் கஸ்தூரியின் மகன்கள் சிரஞ்சீவி, ஜெகதீஷ், மருமகள்கள், இரு குழந்தைகள் ஆகியோரும் அந்த படகில் பயணம் செய்தனர். ஆனால் அவர்கள் சென்று 5 மாதங்கள், அதாவது 150 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
டிசம்பர் மாதம்
இதுகுறித்து கருப்பசாமி கோயிலில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாக உள்ள கஸ்தூரி ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் இதுபோல் சட்டவிரோதமாக படகு பயணம் குறித்து எனது மகன்களோ , மருமகள்களோ என்னிடம் கூறவில்லை. தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்றுவிட்டு டிசம்பர் மத்தியில் வருவதாக மட்டுமே எனது மகன்கள் என்னிடம் கூறியிருந்தனர்.
உயிரோடு
உங்களை போன்ற ஊடகத்தினர் அவர்கள் உயிரோடு இருக்கின்றனரா இல்லை இறந்துவிட்டனரா என்பது குறித்து கண்டறிய உதவ வேண்டும். அக்கம்பக்கம் வீட்டிலிருப்பவர்கள் 5 மாதங்களாகியும் என் மகன்கள் வராததால் அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என கூறி வருகின்றனர்.
கோரிக்கை மனுக்கள்
கடந்த 5 மாதங்களாக நாங்களாக ஏறாத அலுவலகங்கள் இல்லை. டெல்லி போலீஸ், முதல்வர், தேசிய மனித உரிமை ஆணையம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகிய இடங்களில் கோரிக்கை மனுக்களை கொடுத்த வண்ணம் இருந்தோம்.
முறையிட
அந்த கோரிக்கை மனுக்களில் காணாமல் சென்றோரின் பெயர்கள், முகவரிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் எந்த பதிலும் இல்லை. அடுத்ததாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் நேரம் கேட்டுள்ளோம். கிடைத்தவுடன் அவரை சந்தித்து எங்கள் கோரிக்கை குறித்து முறையிடவுள்ளோம் என்றார் கஸ்தூரி.
உறுதி செய்யப்படவில்லை
இதனிடையே 243 பேர் பயணம் செய்த படகு நியூஸிலாந்துக்கு சென்றதாக வதந்தி கிளம்பியது. இதைத் தொடர்ந்து அந்த படகு ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு சென்றதாக கூறப்பட்டது. எனினும் கேரள சிறப்பு புலனாய்வு துறையினர் அந்த படகு உள்ள இடம் குறித்து எதையும் உறுதி செய்யவில்லை.
போன் இணைப்பு
243 பேரும் சிறையில் இருப்பதாகவும் அவர்களது போன் கால்கள் அல்ஜீரியாவில் இருப்பது போல் காட்டுவதாகவும் வதந்திகள் கிளப்பப்பட்டன. இவர்கள் அளித்த செல்போன் எண் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவர்கள் கூறுவது போல் அல்ஜீரியாவில் போன் இணைப்பு இல்லை என்றனர்.
கிடைக்கவில்லை
சர்வதேச எண்களில் இருந்து காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு மிஸ்டு கால்கள் வந்ததாகவும் அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டால் அது கிடைக்க பெறவில்லை என்றும் கூறுகின்றனர்.