சபரிமலைக்காக கேரளாவில் பிரமாண்ட பெண்கள் சுவர்.. வலதுசாரிகள் மட்டுமில்லை, மாவோயிஸ்டுகளும் எதிர்ப்பு
கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் ''பெண்களின் சுவர்'' போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
இந்த போராட்டத்திற்கு வனிதா மதில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான சம உரிமை என்று கோரிக்கையின் அடிப்படையில் இந்த போராட்டம் நடக்க உள்ளது.
அரசு ஆதரவு
கேரள அரசு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்கிறது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் நடக்கும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். சபரிமலை பிரச்சனைக்கு மத்தியில் இந்த போராட்டம் நடப்பதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது.
எத்தனை பேர்
மொத்தம் 620 கிமீக்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி போல சாலை ஓரம் நிற்க போகிறார்கள். மொத்தம் 10 லட்சம் பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை இந்த சங்கிலி நீள உள்ளது.
சிலர் மிரட்டல்
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. வலதுசாரி அமைப்பினர் மற்றும் மாவோயிஸ்டுகள் இந்த போராட்டத்தின் போது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மக்களின் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதாக அரசு மீது மாவோயிஸ்டுகள் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பெண்களின் அமைதியான போராட்டத்தை சில விஷமிகள் வன்முறையாக மாற்றலாம் என்று புகார்கள் வந்தது.
போலீஸ் பாதுகாப்பு
இதன் காரணமாக தற்போது கேரளாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.