கேரளாவில் இன்று அரசு விடுமுறை.. அச்சுதானந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அலைமோதும் கூட்டம்- நாளை தகனம்
திருவனந்தபுரம்: முன்னாள் முதல்வர் விஎஸ் அச்சுதானந்தன் மறைவையொட்டி கேரளாவில் இன்று அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. விஎஸ் அச்சுதானந்தன் உடல் திருவனந்தபுரத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து இன்று இரவு ஆலப்புழாவுக்கு எடுத்து செல்லப்பட்டு அவரது சொந்த கிராமத்தில் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.
கேரளாவின் முன்னாள் முதல்வர் விஎஸ் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை கேரளாவில் முதல்வராக செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்பு வகித்து வந்த விஎஸ் அச்சுதானந்தன் தனது 82வது வயதில் தான் முதல்வர் ஆனார்.

அதன்பிறகு அவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இதற்கு அவரது உடல்நலம் தான் காரணம். வயது முதிர்வு காரணமாக உடல்நல பிரச்சனைகளை அச்சுதானந்தன் எதிர்கொண்டார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து விலகியேயே இருந்தார்.
ஆலப்புழாவில் அவர் வசித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறுநீரக பிரச்சினையாலும் அவர் அவதிப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் திருவனந்தபுரம் ஏ.கே.ஜி. கல்வி ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்படுகிறது. பிறகு அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆலப்புழாவிற்கு எடுத்து செல்லப்படும்.
ஆலப்புழா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் ஆலப்புழா சுடுகாட்டில் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.
மறைந்த வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு வசுமதி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், வி.வி.ஆஷா என்ற மகளும் உள்ளனர்
வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவரது மறைவையொட்டி இன்று முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த 3 நாட்களும் கேரளாவில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளது.
1923-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ஆலப்புழை மாவட்டம் புன்னபுராவில் பிறந்தவர், வி.எஸ்.அச்சுதானந்தன். அவருடைய இயற்பெயர் சங்கரன் அச்சுதானந்தன். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். 7-ம் வகுப்பு வரை படித்த அவரால், தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதனால் துணிக்கடையில் அவர் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்.
கேரளாவின் மூத்த அரசியல்வாதியான வி.எஸ்.அச்சுதானந்தன் மிகவும் எளிமையானவர். கேரளாவில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தவர். இதுதவிர 1992-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மக்கள் பணியாற்றினார். பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காதவர்.
1980-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராகவும், நீண்ட காலம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவு கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் பேரிழப்பாகும்.












Click it and Unblock the Notifications