பெரியார் பிறந்தநாள்.. செமையான ட்வீட் போட்ட பினராயி விஜயன்.. நெட்டிசன்கள் பாராட்டு மழை!
திருவனந்தபுரம்: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றுக்கு பெரியார் செய்த செயல்கள் பல நூற்றாண்டு காலம் தாண்டியும் நிலைத்திருக்கும்.
தந்தை பெரியாரின் பிறந்தநாள், இனி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி பெரியாரின் பிறந்தநாள் இன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டது.
சமூக நீதியை கட்டமைத்த பெரியார் வரலாற்றின் வார்த்தைகளால் உச்சரிக்கப்படுவார்.. வைரமுத்து கவிதை
சமூக நீதி நாள்
சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்வர் மு..க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் அமைச்சர்கள், தி.மு.க எம்.பி.க்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். மேலும், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 'சமூக நீதி நாள்' உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. ''சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்'' என்று முதல்வர் உறுதிமொழி வாசித்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் அதனை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மரியாதை
இதேபோல் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும், தமிழகத்தின் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும், பெரியார் சிலை, உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
பினராயி விஜயன் ட்வீட்
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்' என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டை தொடர்ந்து பினராயி விஜயனுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள்
அதே வேளையில் பெரியார் கம்யூனிஸ்ட்டுகள் செயல்பாடுகளை முழுமையாக விமர்சித்தார் என்று பலர் பினராயி விஜயன் ட்வீட்டுக்கு கீழே கருத்து பதிவிட்டு வருகின்றனர். ''கம்யூனிஸ்ட்டுகளை எடுத்து கொள்வோம். உலகத்தில் அறிவு பிறக்குமிடம் அங்கேதான் உள்ளது என்பார்கள்.ஆனால் நம் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டகாரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டிவிடும் அராஜகர்களையும் கொண்டுள்ளது'' என்று பெரியார் கூறியதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.