கேரளா உள்ளாட்சி தேர்தல்.. ஆக மொத்தம், பாஜகவுக்கு வெற்றியா, தோல்வியா?
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் சில புதிய வார்டுகளை பாஜக வென்றிருந்தாலும், ஏற்கனவே பதவியில் இருந்த பல வார்டுகளை இழந்துள்ளது. அதனால்தான், இந்த தேர்தல் தங்களுக்கு, வெற்றியா? தோல்வியா? அல்லது வெற்றிகரமான தோல்வியா? என்று புரியாமல் பாஜக தலைவர்கள் சிந்தனையில் ஆழ்ந்து போயுள்ளார்கள்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. நேற்று வரையிலும் கூட சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை விபரம் வெளியாகிக் கொண்டிருந்தது.
அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால், மக்களின் மனநிலையை கணிக்கும் தேர்தல் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கேரள உள்ளாட்சி தேர்தல்:பாஜக தேசிய துணைத் தலைவர் அப்துல்லாகுட்டி சகோதரருக்கு மொத்தமே 20 வாக்குகள்தான்
இடதுசாரிகள் ஆதிக்கம்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை போலவே இந்த முறையும் இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பாஜக கூட்டணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலக்கை எட்டாத பாஜக
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 1236 சீட்டுகளை வென்றது. 14 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த முறை பாஜக கூட்டணி 1800 வார்டுகளை வென்றுள்ளது. எப்படியாவது 2500 சீட்டுகளை வென்றுவிட வேண்டும் என்பது பாஜக இலக்காக இருந்தது. ஆனால் அந்த இலக்கை அடைய முடியவில்லை என்ற போதிலும் முந்தைய தேர்தலை விட அதிக வார்டுகளில் வென்றிருப்பது அதற்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது.
வெற்றிகரமான தோல்வி
ஆனால் ஏற்கனவே பதவி வகித்த 600 வார்டுகளை இழந்துள்ளது அதற்கு தோல்வியாக பார்க்கப்படுகிறது. எனவேதான் திரிசங்கு சொர்க்கம் என்ற நிலையில் பாஜக சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளை தங்களுக்கான வெற்றி என்று எடுத்துக் கொள்வதா தோல்வி என்று எடுத்துக் கொள்வதா என்பது அதன் தலைவர்கள் பலருக்கும் புரியவில்லை.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலை எடுத்துக்கொள்ளலாம். இந்த முறை அங்கு 34 வார்டுகளை வென்று, மீண்டும் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது பாஜக. இதற்காக மகிழ்ச்சி தெரிவிக்கலாம் என்றால் கடந்த முறையை விட 1 வார்டு குறைவாகத்தான் வென்றுள்ளது பாஜக. எனவே முழுமையாக மகிழ்ச்சி அடையவும் முடியவில்லை. ஏனெனில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிவிடுவோம் என்று அதீத நம்பிக்கையுடன் இருந்தது பாஜக.
பாஜக சிந்தனை
எனவேதான், திருவனந்தபுரம் மாநகராட்சியில், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இடதுசாரிகளுக்கு ஓட்டு போட்டு பாஜக அதிக வார்டுகளில் வெல்ல முடியாமல் செய்துவிட்டதாக பாஜக தலைமை புகார் கானம் பாடத் தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு இது வெற்றியோ, தோல்வியோ தெரியாது. ஆனால் இடதுசாரிகளுக்கு வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.