ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா... லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
Recommended Video
திருவனந்தபுரம்: கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்.
அந்த வகையில், இந்தாண்டு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 40 லட்சம் பெண்கள் சுமார் 15 கிலோ மீட்டர் வரை பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
பொங்கல் விழா
கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்த கண்ணகி வானுலகம் அடையும் முன் வந்த இடம் தான் ஆற்றுக்கால் என்பது ஐதீகம். இங்கு பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபடுகின்றனர். மாசி மாதத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
அர்ச்சனை பூக்கள்
காலையில் கோயில் தந்திரி தெக்கேடத்து பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிப்பாடு, கோவிலில் இருந்து தீபம் எடுத்து வந்து பண்டார அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குட்டி விமானம் மூலம் அர்ச்சனை பூக்கள் தூவப்பட்டது.
|
லட்சக்கணக்கான பெண் பக்தர்கள்
இந்த பொங்கல் திருவிழாவில் கேரளா மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். கோவில் பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை
திருவிழாவையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கோவில் வளாகத்தில் பாதுகாப்புக்காக பெண் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஒரே நேரத்தில் இந்த கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்து உள்ளது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும், 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.