Breaking News: கேரளாவை அதிர வைக்கும் பெண்கள் மதில் போராட்டம்
திருவனந்தபுரம்: பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் மாபெரும் 'பெண்கள் மதில்' மனித சங்கிலி நடைபெறுகிறது.
தெற்கேயுள்ள திருவனந்தபுரம் முதல் வடக்கு பகுதியான காசர்கோடு வரை 620 கி.மீ நீளத்திற்கு இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி இந்த மனித சங்கிலி நடைபெறுவதாக கூறப்பட்டாலும், 'வனிதா மதில்' என பெயரிடப்பட்டுள்ள இந்த பெண்கள் மனித சங்கிலி தொடர்பான அறிவிப்பில் நேரடியாக அது குறிப்பிடப்படவில்லை. பெண்கள் சம உரிமைக்காக போராடுவதாக அறிவிக்கப்பட்டு மனித சங்கிலி முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு இடதுசாரி பெண்கள் அமைப்பினர் மட்டுமின்றி, இந்து அமைப்புகள் சிலவும் ஆதரவு அளித்துள்ளன. ஏற்கனவே சில தினங்கள் முன்பாக சபரிமலை பாரம்பரியம் காப்போம் என்று, வலதுசாரி அமைப்பினர் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் அரசு ஆதரவுடன் இந்த மனித சங்கிலி நடைபெறுவதாக கூறப்படுகிறது.