கேரளாவில் களைகட்டும் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா.. பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சூர்
திருச்சூர்: உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா கேரள மாநிலம் திருச்சூரில் களைகட்டியுள்ளது. 30 நாள் நடக்கும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 100-க்கும் மேற்பட்ட யானைகள் திரளும் அணிவகுப்பு நாளை நடைபெற உள்ளது.
நாளைய நிகழ்வில் செண்டை உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளை கொண்ட பஞ்ச வாத்தியங்களின் சப்தம் விண்ணை பிளக்க உள்ளது. வான வேடிக்கைகளும் களை கட்டும்.
யானைகள் தங்கள் முகப்பகுதியில் அணியும் தங்க ஜரிகைகளால் ஆன நெற்றிபட்டம், மயிலிறகுகளாலான ஆலவட்டம், எருதின் முடிகளால் ஆன வெஞ்சாமரம், முத்துகளால் தொகுக்கப்படும் முத்துகுடா இவைகள் யாவும் யானைகளின் மீது அமரும் அம்பாரிகளால் பார்வைக்கு வைக்கப்படும். இந்த கலைநயமிக்க ஆபரணங்கள் யாவும் பரமேக்காவு மற்றும் திருவெம்பாடி கோயில்களில் வடிவமைக்கப்படுகின்றன.
இதற்கான ஒத்திகை திருச்சூரின் வடக்குநாத சிவன் கோயில் திடலில் சிறப்பாக நடைபெற்றது. பூரம் விழாவில் பங்கேற்க கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் திருச்சூருக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.
கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தினரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் திருச்சூரில் குவிந்து வருகின்றனர். திருவம்பாடி, வடக்கு நாதர் உள்ளிட்ட 3 கோவில்களில் பூரம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து குறிப்பிட்ட கோவில்களில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களை இஷ்டத்துக்கு நிறுத்த முடியாது.. சென்னை தெருக்களில் பார்க்கிங் சிஸ்டம் வருகிறது
மெட்டல் டிடெக்ட்டர் வைத்து சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளைய பூரம் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் திருச்சூர் நகரே காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது
இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பினர், பாலக்காடு அருகே சிக்கியதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. தீவிர சோதனைகளுக்கு பிறகே பக்தர்கள் நாளைய திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே பக்தர்கள் கைப்பை உள்ளிட்ட எதையும் எடுத்து வர வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.