கேரளாவில் 15 வயது மாணவிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி... செவிலியர் சஸ்பெண்ட்... விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம் : ஆரியநாடு அரசு மருத்துவமனையில் 15 வயது மாணவிகள் 2 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி தவறுதலாக செலுத்தப்பட்ட சம்பவம் குறித்து சுகாதாரத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2 மாணவிகளுக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திய விவகாரத்தில் செவிலியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேறு ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போட வந்த மாணவிகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்யநாடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கமான தடுப்பூசிகளுடன் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடும் இடத்திற்கு இரண்டு மாணவிகள் சிறிது நேரத்திற்கு முன்னர் எங்களது நண்பர்கள் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். எங்களுக்கும் போடுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அங்கிருந்த செவிலி கொரோனா தடுப்பூசி காலியாகிவிட்டது மறுநாள் வாருங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.
15 வயது மாணவிகளுக்கு கோவிஷீல்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகள் நாங்கள் 15 வயதில் போடும் தடுப்பூசிதான் போடவந்தோம் எனக் கூற, அப்போதுதான் ஏற்கனவே வந்த 15 வயது மாணவிகள் இருவருக்கு கோவிஷீல்டு ஊசி தவறாக போடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு திரண்ட மாணவிகளின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதுதான் அந்த குழந்தைகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவிட் தடுப்பூசி என்பதை மருத்துவமனை அதிகாரிகளும் உணர்ந்தனர். இதை அடுத்து மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ அதிகாரி விசாரணை
இதற்கிடையே கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்ட 2 மாணவிகளையும் மருத்துவமனையில் அனுமதித்து அவர்களது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது வரை அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் இவ்வளவு பெரிய தவறு எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய சுகாதாரத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஜோஸ் டி'குரூஸ் மருத்துவமனை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இரண்டு மாணவிகளின் பெற்றோரையும் சந்தித்து எந்த ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம் என உறுதி அளித்தார்.
நர்ஸ் தற்காலிக பணிநீக்கம்
15 வயதில் போடவேண்டிய தடுப்பூசி போடுவதற்காகத்தான் மாணவிகள் மருத்துவமனை வந்துள்ளனர் என்றும் ஆனால் வழி தெரியாமல் கொரோனா தடுப்பூசி போடும் இடத்திற்கு சென்றுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், கோவிஷீல்டு போடும் செவிலியர்கள் பயனாளியின் வயது மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும். ஏன் செவிலியர் கேட்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 15 வயது மாணவிகளுக்கு தவறாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய செவிலியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.