"ப்ளீஸ்.. பஸ்ஸை நிறுத்துங்க".. கதறி கொண்டு வந்த சுப்ரியா.. தாத்தாவுக்காக.. நெகிழ வைத்த 2020 வீடியோ
மாற்று திறனாளிக்காக பஸ்ஸை நிறுத்திய கேரள பெண்ணின் வீடியோ மறக்க முடியாத ஒன்றாகும்
திருவனந்தபுரம்: "சேட்டா... ப்ளீஸ்.. பஸ்ஸை நிறுத்துங்க" என்று கத்திய சுப்ரியாவின் கதறல் இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.. கேரளாவை மட்டுமல்ல, நாட்டு மக்களின் கவனத்தை ஒரே நாளில், ஒரே செயலில் ஈர்த்துவிட்டார் இந்த பெண்.. கடுகளவு உதவிதான் என்றாலும், இந்த வருடம் அதிக அளவு பேசப்பட்டவரில் ஒருவர் சுப்ரியா என்ற ஹீரோ..!
கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர் சுப்ரியா... இவர் அங்குள்ள ஜாலி சில்க்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது வீடியோதான் சில மாதங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் வைரலானது.
நடந்த சம்பவம் இதுதான்: சம்பவத்தன்று, வழக்கம்போல் வேலை முடிந்து சுப்ரியா வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.. அப்போது கண்பார்வையற்ற வயசான தாத்தா ஒருவர் பஸ் ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்திருக்கிறார்.
இதை பார்த்த சுப்ரியா, அந்த பெரியவரிடம் சென்று எங்கே போகணும் என்று கேட்கவும், பத்தனம்திட்டாவில் உள்ள மஞ்சடிக்கு போக வேண்டும் என்று சொல்லி உள்ளார்... அதனால் பஸ் ஸ்டாண்டுக்கு பெரியவரை கைப்பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்தபோது, திருவல்லா போகக்கூடிய பஸ், அந்த ரோட்டில் மெதுவாக சென்று கொண்டிருப்பதை பார்த்தார்.. உடனே சுப்ரியா "பஸ்ஸை நிறுத்துங்க.. ப்ளீஸ்" என்று கத்திக் கொண்டே ஓடிப்போய் நிறுத்தினார் சுப்ரியா.
மூச்சிறைக்க இவர் ஓடிவருவதை பார்த்ததும் கண்டக்டரும் பஸ்ஸை நிறுத்திவிட்டார்.. அதன்பிறகுதான் தகவலை சொல்லி கண்டக்டரிடம் சொல்லி, திரும்பவும் ஓடிப்போய் அந்த தாத்தாவின் கையை பிடித்து கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டார்.. இந்த காட்சிகள் அத்தனையையும் அங்கிருந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஜோஷ்வா என்பவர் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட, அதுதான் வைரலானது.
சுப்ரியாவுக்கு ஒரே நாளில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் குவிந்தன.. இந்த வீடியோ ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் கண்ணிலும் பட்டுவிட்டது.. உடனே சுப்ரியாவை அவருடைய வீட்டில் சென்று பார்த்து வாழ்த்து சொன்னார்.. அத்துடன், திருச்சூரில் இருக்கும் தலைமை நிறுவனத்தில் வந்து தன்னை சந்திக்குமாறும் சொன்னார்.. அதன்படியே சுப்ரியாவும், தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது, அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் முன்னிலையில் சுப்ரியாவிற்கு வீடு ஒன்று வழங்கப்படும் என்று கூறினார் ஜாய் ஆலுக்காஸ் நிறுவன தலைவர்.. சுப்ரியாவிற்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. வாடகை வீட்டில் குடியிருந்து வரும் சுப்ரியாவிற்கு இது மறக்க முடியாத உதவி ஆகும்.. மனிதநேயம் இன்னும் மரித்து போய்விடவில்லை.. அது இன்னமும் சுப்ரியா போன்ற ரியல் ஹீரோக்கள் மூலமாக ஆங்காங்கே பூத்து கொண்டுதான் இருக்கின்றன..!