எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்
Recommended Video
சென்னை:லோக்சபா தேர்தல் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை, ஒரு வாரத்தில் நல்ல தகவல் வந்து சேரும் என்று பிரமலதா விஜயகாந்த் அறிவித்திருக்கிறார்.
விஜயகாந்தை அதிமுக, பாஜக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக அணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து விஜயகாந்துக்கு 3 முதல் 4 இடங்கள் வரை கொடுப்பதாக பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ்கோயல் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இழுபறி நீடிப்பு
ஆனால் விஜயகாந்த் தரப்பில் பாமகவுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் இழுபறி நீடிக்கிறது. அதன் காரணமாக விஜயகாந்த் அதிமுக அணியில் இடம்பெறுவாரா? என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
பிரேமலதா பேட்டி
இந் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கூட்டணி தொடர்பாக எந்த குழப்பமும் இல்லை. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
விஜயகாந்த் முடிவு செய்வார்
தேமுதிகவின் வாக்கு சதவீதம் எங்களுக்கு தெரியும். அதனால்.. எங்களுக்காக தொகுதிகள் கிடைக்கும். எந்த தொகுதிகள் என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்.
ஒரு வாரத்தில் கூட்டணி
எந்த கட்சியுடனும் தேமுதிகவை ஒப்பிட வேண்டாம். எங்களின் பலம் என்பது எங்களுக்கும் தெரியும். தொண்டர்களுக்கும் தெரியும். ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க.. நல்ல முடிவு தெரியும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.