சென்னையில் ஒரு மாதத்தில் கொரோனாவை விரட்ட மாஸ்கை வைத்து மாஸ் பிளான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட தேவையில்லை என்றும், அனைவரும் ஒரு மாதம் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செயதியாளர்களிடம் பேசுகையில், "சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும், 9036 பேர் இதுவரை சென்னையில் குணம் அடைந்துள்ளார்கள்.
இன்றைய தேதிக்கு 8405 பேர் நோய் தொற்றுடன் சென்னையில் உள்ளார்கள். இது தொடர்பாக தினமும் சுகாதாரத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. பாதிப்பை சொல்லும் போது குணம் அடைபவர்களையும் சொல்ல வேண்டும்.
மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்
எப்படி சாத்தியம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர், மூத்த அமைச்சர்கள் இந்த கொரோனா தடுப்பு களப்பணியை கண்காணித்து வருகிறார்கள். நமக்கு உள்ள சவால் என்றால், கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாதா நோய் தொற்று. இந்த தொற்று மூர் மார்க்கெட், ஜிஆர் பிள்ளை தெரு ஆகியவற்றில் கொரோனா கேஸ் 88 மற்றும் 39 கேஸ் ஆக இருந்த நிலையில் இப்போது பூஜ்யம் ஆகி உள்ளது. இது எப்படி சாத்தியம் ஆனது என்பது புரிந்தால் தான் மக்கள் கொரோனாவில் இருந்து மீள உதவும்.
ஒத்துழைப்பு அவசியம்
மூர் மார்க்கெட், ஜிஆர் பிள்ளை தெரு பகுதிகளில் கொரானா நோய் பாதிப்பு காரணமாக அங்குள்ள அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்தார்கள். கட்டுப்பாட்டு பகுதிகள் என்ற அறிவிப்பு வந்த பின்னர், அந்த பகுதி மக்கள் முழுமையாக அரசின் அறிவுறுத்தல்களை கடைபிடித்தார்கள். அங்குமட்டுமல்ல தட்டாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் மக்கள் ஒத்துழைப்பால் வெற்றி கிடைத்துள்ளது.
தண்டையார் பேட்டை
சவாலான பகுதிகளில் என்ன சவால் என்றால் தண்டையார் பேட்டை மற்றும் இராயபுரம் மற்றும் திருவிநகர், கோடம்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள கொரோனா தொற்று. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் அச்சப்படக்கூடாது. முதல்வர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில், எந்த வார்டில் எவ்வளவு பாதிப்பு, எந்த தெருவில் எவ்வளவு கேஸ் என பார்த்த போது, போஜராஜன் நகரில் முற்றிலும் குறைத்துவிட்டது. இதற்கு அந்த மக்களின் ஒத்துழைப்பு காரணம்.
கட்டாயமாக மாஸ்க்
எலி காய்ச்சல் என்றால் எலியிலும், டெங்கு என்றாலும் நல்ல தண்ணீரிலும் வரும் என்பது மக்களுக்கு தெரியும். இந்த கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் எப்படி வருகிறது என்பதை உள்வாங்கி கொள்ள மக்களுக்கு சவாலாக உள்ளது. இதற்கு நேரடி மருந்து இல்லை. தடுப்பூசி இல்லை. எல்லாரும் கட்டாயம் மாஸ்க் அணிய உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. எனவே எல்லாரும் ஒரு மாதம் கட்டாயம் மாஸ்க் அணிந்தால் நோய் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
பயப்பட வேண்டாம்
அடிக்கடி கை கழுவ வேண்டும். இப்ப பிரச்னை என்னவென்றால் ஒருவரிடம் இருந்து 10 பேருக்கு பரவி விடுகிறது. காய்ச்சல் முகாம் போட்டு கண்டுபிடித்து வருகிறோம். எண்ணிக்கையை பார்த்து பயப்படாமல் இறப்பை குறைக்க வேண்டும். இப்போது கடைசி நேரத்தில் தான் நிறைய கேஸ்கள் வந்துள்ளது. இந்தியாவிலேயே குறைவான இறப்பு விகிதம் என்றாலும், இறப்பை நாம் குறைக்க வேண்டும். அதற்குத்தான் காய்ச்சல் முகாம் போடுகிறோம். அதில் காய்ச்சல் , சளி, தொண்டை வலி இருந்தால் அவர்களை பரிசோதிக்கிறோம்.தள்ளுவண்டி, மெடிக்கல்ஷாப், கடைக்கார்கள் என பலரையும் தேடிச்தேடிச் சென்று சோதனை செய்து தனிமைப்படுத்துகிறோம். தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறோம். அதனால் நம்பர் அதிகரித்துள்ளது. நம்பர் அதிகரிப்பதை அச்சப்படக்கூடாது.
Recommended Video
கட்டாய தனிமை
4944 பெட்டுகள் சென்னை அரசு மருத்துவனைகளில் உள்ளன. தனியார் மருத்துவமனையில் 4038 பெட்டுகள் உள்ளன. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்களை மொத்தமாக அழைத்துச்சென்று 7 அல்லது 8 நாட்கள் தனிமைப்படுத்தி சத்தான உணவு கொடுத்து பரிசோதிக்க போகிறோம். தண்டபாணிதெருவில் நான் பார்த்தேன். அவர்கள் முக கவசம் அணியாமல் இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரிகளை பார்த்த உடன் முககவசம் அணிகிறார்கள். இதுதவறு இப்படி பட்டவர்களை ஐசலேசன் வார்டில் கட்டாயமாக போட்டுவிடுவோம். இன்றைய சூழலில் 22 தெருக்களில் தான் கொரோனா உள்ளது. படிப்படியாக குறையும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தேடி கண்டுபிடித்து தனிமைப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.