பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை ஆடியோ.. மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பு
சென்னை: நடிகை குஷ்பு பத்திரிக்கைக்காரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகை குஷ்பு, சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார். அவர் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளராகவும் உள்ளார்.
இவர் பேசிய ஆடியோ ஒன்று சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் குஷ்பு ஒருமையில் திட்டி பத்திரிக்கையாளர்களை விமர்சிப்பதாக உள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சர்ச்சை ஆடியோ விவகாரம்.. முதுகில் குத்திய தயாரிப்பாளர்.. நடிகை குஷ்பு வேதனை
சர்ச்சை ஆடியோ
இது சர்ச்சையாக மாறிய நிலையில். ஆடியோ தொடர்பாக குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது பதிவில், "நான் பத்திரிக்கையாளர்களை பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் உலா வருகிறது. ஆனால் அது எடிட் செய்யப்பட்டது. எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து வெளியே சென்றுள்ளது.
அப்படி பேசவில்லை
எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்களே என்று எண்ணி நான் வெட்கப்படுகிறேன். எனது நோக்கம் தெளிவானது, பத்திரிக்கையாளர்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் பேசவில்லை. நண்பர்களிடம் நாம் பேசும் தொனியில் தான் பேசினேன்.
குஷ்பு வருத்தம்
பத்திரிக்கைகள், ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும். சில பத்திரிகையாளர்கள் அதற்கு சாட்சி. திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள். அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக இருக்கிறது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
70 நாள் பிறகு படப்பிடிப்பு
70 நாட்களுக்கு பிறகு சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளதற்கு நடிகை குஷ்பு மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். 60 பேரை படப்பிடிப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நேற்று தொடங்கின. இது தொடர்பாக குஷ்பு வெளியிட்ட பதிவில், ஊரடங்கால் 70 நாள் இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பை தொடங்குகிறோம். தினக்கூலி தொழிலாளர்களின் முகத்தில் புன்னகையை காண்கிறோம். படப்பிடிப்பு தளங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது" என்று கூறியிருந்தார்.