சசிகலாவை மறைமுகமாக விமர்சிப்பதா.. தர்பார் வசனத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. வழக்கறிஞர்
சென்னை: சசிகலாவை தர்பார் திரைப்படத்தில் மறைமுகமாக விமர்சனம் செய்து வசனம் இடம்பெற்றிருந்தால் அதை நீக்க சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் தர்பார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி காசு இருந்தால் சிறைக் கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனத்தை கூறுவார்.
இது முழுக்க முழுக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஷாப்பிங் போனதாக வெளியான வீடியோவை முன்னிட்டு இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதை சசிகலாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரஜினியின் வசனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் அதை நீக்க வேண்டும்.
தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்திருந்தது நல்ல கருத்து.. வரவேற்கிறேன்.. அமைச்சர் ஜெயக்குமார்
காவல் துறை அதிகாரி வினய்குமாரும் தனது அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் செல்வது போல் எங்கேயும் குறிப்பிடவில்லை. எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என ரஜினி, ஏ ஆர் முருகதாஸ் ஆகியோருக்கு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று தெரிவித்துள்ளார். அது போல் ஆதாரம் இல்லாமல் பேசும் ஜெயக்குமார் மீதும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.