சென்னையிலிருந்து சொந்த ஊர் கிளம்பிய மக்கள் நிலை என்ன? எப்படி இருக்கிறது ஹைவே நிலவரம் தெரியுமா?
சென்னை: முழு ஊரடங்கு காரணமாக சென்னையிலிருந்து சாரை சாரையாக சொந்த மாவட்டங்களுக்கு வாகனங்களில் பயணித்த பொதுமக்களுக்கு கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Recommended Video
கொரோனா நோய் பாதிப்பு காரணமாக இன்று அதிகாலை 12 மணி முதல் வரும் 30ஆம் தேதி வரை, மொத்தம் 12 நாட்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இதனால் பல்வேறு தொழில்கள் தற்காலிகமாக முடங்கும் நிலை உருவானது. இதையடுத்து 12 நாட்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கமுடியாது என்றும், ஊருக்கு சென்று வேறு வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்திலும், ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் நேற்று முதல் சென்னையில் இருந்து புறப்பட்டனர்.
சென்னையில் லாக்டவுன் பயனுள்ளதாக வேண்டுமா?.. இதையெல்லாம் ஃபாலோ செய்ங்க!.. பிரதீப் கவுர் அட்வைஸ்
பரனூரில் முதல் பரிசோதனை
முதலில் அவர்கள் பரனூர் சுங்கச்சாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இ பாஸ் இல்லாதவர்கள் அப்படியே திரும்பிப் போகுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பலரும் இதைத் தாண்டி தென் மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை போன்றவற்றுக்கு சாரைசாரையாக வாகனங்களில் கிளம்பினர். ஆரம்பத்தில் அவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது. ஆனால் திருச்சியை தாண்டிய பிறகு மேலூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வாகனங்களில் வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலூரில் கடும் செக்அப்
காய்ச்சல், இருமல், உடல்வலி போன்றவை இருக்கிறதா என்பது கேட்கப்படுகிறது. ஸ்கேன் மூலமாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. நோய்த்தொற்று அறிகுறி இருந்தால், அருகே உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட தனிமை மையங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு இன்று அல்லது நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுவரை அவர்கள் அந்த மையங்களில்தான் தங்கியிருக்க வேண்டும். இன்று காலை வரை கிடைத்த தகவல் படி, மேலூர்சோதனை சாவடியில் சுமார் 52 பேர் இதுபோல தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
திருநெல்வேலி பரிசோதனை
மற்றொரு பக்கம், திருநெல்வேலிக்கு முன்பாக, சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அங்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. வாகனங்கள் அனைத்தின், பதிவு எண்கள் எழுதப்படுகின்றன. அவர்கள் வைத்திருக்கக்கூடிய இ பாஸ் ஒரிஜினல்தானா, இல்லையா என்பதை ஸ்கேன் செய்து பார்க்கிறார்கள். ஒருவேளை போலியான பாஸ் என்றால் அவர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
வீட்டை காலி செய்து செல்லும் மக்கள்
அதேநேரம் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் போன்றவற்றிக்கு எந்த சோதனையும் நடத்தப்படுவதில்லை. தடையின்றி தொடர்ந்து இயங்குகின்றன. மேலூர் மற்றும் கங்கைகொண்டான் சோதனை சாவடிகளில் பார்க்கும்போது அங்கு வரக்கூடிய வாகனங்கள் பலவற்றின் மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிகிறது. அதாவது பெரும்பாலானோர் சென்னையில் உள்ள தங்கள் வீடுகளை மொத்தமாக காலி செய்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். கேரள வாகனங்களும் கணிசமாக செல்வதை பார்க்க முடிந்தது.
அதிக வாகனங்கள்
வாகன தணிக்கை அதிகாரிகளிடம் கேட்டபோது, காலையிலிருந்து வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வந்து கொண்டிருந்தது. மதிய நேரத்தில் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. மாலை அதிகரிக்க கூடும் என்கிறார்கள். வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கு காவல்துறையினர் இல்லாததால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. எனவே என்னதான் வேகமாக பயணித்தாலும் சோதனை சாவடிகளில் காலதாமதம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள்.
சட்ட விரோதமாக ஓட்டம்
சிலர் மெயின் ரோடு தவிர்த்துவிட்டு சந்து பொந்து வழியாக சோதனைகளில் இருந்து தப்பித்து ஓடுவதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இவ்வாறு தப்பித்துச் செல்ல முடிகிறது. இருப்பினும் சொந்த ஊருக்கு சென்ற பிறகு அவர்கள் யாருடனும் பழகாமல் தனிமைப் படுத்திக் கொள்வது அனைவருக்கும் நல்லது.
மக்களே உஷார்
இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அது நெகட்டிவ் என்று வந்தாலும், நாளையேகூட பாசிட்டிவான மாறக் கூடும். எனவே சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு வீடுகளுக்கு உள்ளேயே தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு, தங்களையும் தங்கள் சார்ந்தவர்களை் உயிரையும் காப்பாற்ற முன்வரவேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டு இருக்கிறது.
சென்னை மக்கள்
இத்தனை சோதனைகளையும் தாண்டி, சொந்த ஊர் சென்று என்ன சாதிக்கப் போகிறோம் என்று நினைக்கும் பலரும் சென்னையிலேயே தங்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். வரும் 12 நாட்களுக்குள் அதிகப்படியான சோதனைகளை நடத்தி, சென்னையில் இருந்து கொரோனா நோய் தொற்றை ஒழித்துக் கட்டுவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கேற்ப சென்னையில் தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது. ட்ரோன் மூலம், முக்கிய இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.