ஜெ., வசித்த வீட்டை மக்கள் பணத்தில் நினைவில்லமாக்குவது அவசியமா.? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த இல்லத்தை மக்கள் வரிப்பணத்தில் நினைவிடமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் மறைந்த ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை நிலைக்க செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றதே. சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் அமைச்சர்கள் ஜெயலலிதாவை பற்றி தினந்தோறும் புகழந்து பேசி தான் வருகின்றனர்.
ஜெயலலிதா தங்கியிருந்தார் என்பதற்காக கோடநாடு எஸ்டேட்டையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா என நீதிபதிகள் அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவது குறித்து முறைப்படி பத்திரிகைகளில் அரசால் விளம்பரமும் வெளியிடப்பட்டது.
அரசின் திட்டத்திற்கு ஆட்டேசபம் தெரிவிப்பவர்கள் 60 நாட்களுக்குள் கூற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற, ஜெ.தீபா மற்றும் தீபக் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக வாதிட்ட தீபா மற்றும் தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், வேதா நிலையத்தை அரசு நினைவில்லமாக்க ஆட்சேபம் தெரிவித்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை உள்ளடக்கிய வேதா நிலையத்தை எடுத்து கொண்டு, ரூ.35 கோடி மட்டுமே கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் சந்தை நிலவரப்படி ரூ.100 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட இடம் வேதா நிலையம். எனவே இது தொடர்பாக எங்கள் ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துளாக கூறினர்.
வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம் ஜெயலலிதா வசித்த இல்லத்தை மக்கள் வரிப்பணத்தில் நினைவிடமாக எதற்கு மாற்ற வேண்டும். அதற்கு அவசியம் என்ன என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. பின்னர் வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது .