சசிகலா உடல்நிலை பாதிப்பின் பின்னணியில் கூட்டுச் சதியோ என சந்தேகம்.. ஜவாஹிருல்லா
திருநெல்வேலி: சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் கூட்டுச் சதி இருக்கலாம் என சந்தேகிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மனிதநேய மக்கள் கட்சியின் தென் மண்டல பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருகின்ற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்கிறது. வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணி சிறப்பான மகத்தான வெற்றி பெறும்.
முதல்வரின் தோல்வி பயம்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இஸ்லாமிய மக்கள் மத்தியில் பேசுகையில் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம் என தெரிவித்துள்ளார். இப்படி பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு, தேர்தல் வரும் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்போம் என பேசுவது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது.
சிஏஏவும் முதல்வரும்
சென்ற ஆண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. அப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். அப்போது சட்டமன்றம் கூடியிருந்த நிலையிலும்கூட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. எனவே தற்போது இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என முதல்வர் கூறுவதை இஸ்லாமியர்கள் யாரும் நம்ப மாட்டார்கள்.
போராடும் விவசாயிகள்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
சசிகலா- கூட்டுச் சதியோ?
சசிகலா சிறையில் இருந்தபோது கூட அவருக்கு எந்தவிதமான உடல்ரீதியான பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் விரைவில் விடுதலையாக உள்ளார் என செய்தி வெளியாகியதை அடுத்து அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சசிகலா வெளியில் வந்தால் யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுமோ அவர்கள் ஒன்றாக இணைந்து செய்யும் கூட்டு சதியோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சின்னமும் திமுக கூட்டணியும்
சின்னங்கள் குறித்து திமுக தரப்பில் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படவில்லை இதுகுறித்து ஏற்கனவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேனியில் நடந்த கூட்டத்தில் விளக்கமாக பேசியுள்ளார். கடந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி எப்படி போட்டியிட்டதோ அதேபோன்று சட்டசபை தேர்தலில் போட்டியிடும். இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.