பயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்
நாங்குநேரி: பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மத்திய உளவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
நாங்குநேரி அருகே மேலக்கருவேலங்குளத்தில் இன்று செய்தியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
ராஜீவ்காந்தி படுகொலைக்கு முன்னதாக தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள். ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் அரசியல் கட்சிகள் நிலைப்பாடுகள் மாறிவிட்டன.
7 தமிழர் விரைவில் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேருக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என நாங்கள் நினைக்கிறோம். அந்த 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. 7 தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
தமிழர்கள் ஏற்கப் போவது இல்லை
ராஜீவ் படுகொலை தொடர்பாக சீமான் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது. எதிரியாக இருந்தாலும் அரவணைத்துச் செல்லும் பண்பு கொண்டவன் தமிழன். ராஜீவை நாங்களே கொன்று புதைத்தோம் என்றெல்லாம் சீமான் பேசுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கவே மாட்டார்கள்.
பயங்கரவாதத்தை தூண்டுகிறார்
சீமானின் பேச்சு பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக உள்ளது. ஆகையால் சீமான் மீது மத்திய உளவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த நாட்டில் யார் பயங்கரவாதத்தைத் தூண்டினாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
உரிய முக்கியத்துவம்
சீனா அதிபரின் வருகையின் போது அவரை வரவேற்க தமிழக முதல்வருக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய ஒன்று. ஜின்பிங்கின் வருகையின் போது தமிழக முதல்வருக்கு உரிய முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்தது. இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.