மணல் கடத்தலை தடுத்த காவலர் கொலை... 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நெல்லை நீதிமன்றம்
நெல்லை: நெல்லை அருகே, மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலரை கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாங்குநேரி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் துரை விஜயநாராயணம் காவல் நிலையத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். 2018ம் ஆண்டு மே 6ம் தேதி இரு சக்கர வாகனத்தில் பரப்பாடி கக்கன் நகர் அருகே ஒரு டிராக்டரில் மணல் கடத்தி செல்வது அவருக்கு தெரியவந்தது.
அதை தொடர்ந்து ஜெகதீஷ் துரை தனது செல்போன் மூலம் விஜய நாராயணம் காவல்துறையை கக்கன் நகர் பகுதிக்கு விரைந்து வரும்படி கூறியுள்ளார். மேலும் தமது இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடிக்க போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஜெகதீஷ் துரை இருசக்கரவாகனத்தில் டிராக்டரை பின் தொடர்ந்து சென்று நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் டிராக்டர் தொடர்ந்து நிற்காமல் சென்றதால் தனது இருசக்கரவாகனத்தில் டிராக்டரை முந்தி சென்று நிறுத்தி டிராக்டரை ஓரம் கட்ட சொல்லியுள்ளார்.
அப்போது கொலை மிரட்டல் விடுத்த கடத்தல்காரர்கள் இரும்பு கம்பியால் ஜெகதீஷ் துரை தலையில் சரமாரி தாக்கினர். அதில் அவர் நிலை குலைந்து சாலையோரம் கீழே விழுந்தார். உடனே மணல் கடத்தி வந்தவர்கள் அவரது உடலை டிராக்டர் மோதி பலியானது போல நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில் இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் மணல் கடத்தல் காரர்களை பிடிக்க சென்ற தனி பிரிவு காவலர் ஜெகதீஷ் துரையை வெட்டி கொலை செய்த வழக்கில் முருகன், கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி கிளாட்ஸன் பிளஸ்டு தாகூர் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் ஆணையிட்டார்.