மைக்கை பிடுங்கி வைத்து சிரித்தார்களாம்.. மனம் குமுறிய பூங்கோதை ஆலடி அருணா.. பரபரக்கும் திமுக பூசல்!
பூங்கோதை ஆலடி அருணா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
நெல்லை: திமுக எம்எல்ஏ பூங்கோதையை பார்த்து, மைக்கை பிடுங்கி வாங்கி வைத்துக்கொண்டு சிரித்திருக்கிறார்கள் சில நிர்வாகிகள்.. இதனால் பொது இடத்திலேயே பூங்கோதை அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.. இந்த மன உளைச்சலிலேயே அவர் சிக்கி தவித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவின் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை.. ஆலங்குளம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக இருப்பவர்.. இவரது குடும்பமே தீவிரமான திமுக விசுவாசி குடும்பம்.
கருணாநிதி மீது அளவுகடந்த பற்றை கொண்டிருந்தவர்கள்.. தற்போதும் திமுகவில் தீவிரமாக சுழன்று வேலை பார்த்து வருபவர் பூங்கோதை.
பூங்கோதை ஆலடி அருணா மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது.. திமுகவில் பரபரப்பு!
உட்கட்சி பூசல்
இந்நிலையில், பூங்கோதைக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக திடீரென ஒரு தகவல் வெளியானது.. மருத்துவமனையில் பூங்கோதை சிகிச்சை பெற்று வருவதாகவும், பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மன அழுத்தம்
அதேசமயம், உட்கட்சி பூசல் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில் நியமிக்கப்பட்ட சிவ பத்மநாபன், துரை என்ற இரு மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகளினால் அவர் அப்செட்டாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில்தான் கடையத்தில் நேற்று கட்சி மீட்டிங் நடந்துள்ளது.. அப்போது அந்த மாவட்டச் செயலாளர்களுமே அதில் பங்கேற்றுள்ளனர்.. இருவருமே பூங்கோதைக்கு ரொம்ப ஜூனியர்கள்.
கிண்டல்
மேடையில் பூங்கோதை இருக்கும்போதே அவரை கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது. உச்சக்கட்டமாக, மைக்கை பிடுங்கி வாங்கி வைத்துக்கொண்டு சிரித்திருக்கிறார்கள்.. இப்படி எகத்தாளம், ஏகடியம் செய்து மேடையிலேயே அவமானப்படுத்தப்பட்டார்.. இதனால் அதிர்ந்து போன பூங்கோதை, வீடு திரும்பியதில் இருந்தே மன அழுத்தத்தில் விழுந்துவிட்டார்.
மரியாதை
மாவட்ட செயலாளர்கள் இருவருமே பூங்கோதைக்கு உரிய மரியாதை தருவதில்லையாம்.. குடும்பத்தாரிடம் இந்த விவரத்தை சொல்லி, தன்னை அசிங்கப்படுத்திதாக மனம் வெதும்பி தெரிவித்திருக்கிறார் போலும்.. அதற்கு பிறகு இரவு 12 மணி வரை கட்சிக்காரர்களிடம் பேசும் போதும் மிகுந்த டிப்ரஷனில் பேசியிருக்கிறார். இந்நிலையில்தான் இன்று காலை பூங்கோதை, மயக்க நிலையிலேயே இருந்ததால் குடும்பத்தினர் பதறிப்போய் அவரை மீட்டு நெல்லை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
அதிர்ச்சி
இப்போது பூங்கோதை நலமாக இருக்கிறார்.. ஆபத்தான நிலையில் அவர் இல்லை என்பதை குடும்பத்தினரே உறுதிப்படுத்தி உள்ளனர். எனினும், ஏற்கனவே உட்கட்சி பூசல் ஒரு சில மாவட்டங்களில் தலைதூக்கி வரும் நிலையில், நெல்லை திமுகவிலும் வெடித்துள்ளதும், அது தற்போது எல்லை மீறி சென்றுள்ளதும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. திமுக தலைமை இதில் உடனடியாக தலையிட்டு தீர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.