தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்.. மனைவி, குழந்தைகள் பத்திரமாக மீட்பு
நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்த போது சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் சுழலில் சிக்கிய நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கிய ஆசிரியரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
விடுமுறை காரணமாக நாராயணன் தனது மனைவி அனுஷயா மகன்கள் ஹரிஸ் , ராம்சங்கர் என குடும்பத்துடன் நெல்லை பாளையங்கோட்டை பொதிகை நகர் அடுத்துள்ள ராமச்சந்திரன் நகரில் வசிக்கும் சகோதரர் ரவி வீட்டிற்கு வந்துள்ளனர். ரவியும் பர்கிட்மாநகர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இனி செப் 9 முதல் திருச்சி டூ மும்பை.. வாரத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை தொடக்கம்
தண்ணீரில் மூழ்கிய ஆசிரியர்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் நாராயணன், அவரது சகோதரர் ரவி ஆகியோர் குடும்பத்துடன் பொட்டல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் நாராயணனின், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆற்றின் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர்.
உயிருடன் மீட்பு
இந்தநிலையில் உயிருக்கு போராடிய நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனுஷயா, மகன்கள் ஹரிஸ், ராம்சங்கர் ஆகியோரை உயிருடன் மீட்டனர் . ஆனால் நாராயணன் தண்ணீரில் மூழ்கிவிட்டார் , அவரை மீட்க முடியாத நிலையில் இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாளை மருத்துவமனை
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகு உதவியுடன் தீவிரமாக நாராயணனை தேடி வருகின்றனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராம்சங்கர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரை ஒதுங்கிய உடல்
இதனிடையே தச்சநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சேந்திமங்கலம் ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் கரை ஒதுங்கி உள்ளதால் உடலை மீட்டு தச்சநல்லூர் காவல்துறையினர் இவர் யார் . எந்த பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.