ராமர் கோவில் கட்டுமானம் கொண்டாடப்பட வேண்டிய தருணம்: ஃபேஸ்புக்கில் 17 மொழிகளில் வெங்கையா நாயுடு பதிவு
டெல்லி: ராமர் கோவில் கட்டுமானம் என்பது மக்கள் கொண்டாட வேண்டிய தருணம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் 17 மொழிகளில் பதிவிட்டுள்ளார்.
கோவிலை மீண்டும் எழுப்புவது, கலாச்சார மதிப்பீடுகளை கட்டி எழுப்புவதாகும் என்ற தலைப்பில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழில் வெங்கையா நாயுடு பதிவிட்டுள்ளதாவது:
இன்னும் ஒரு சில நாட்களில், அயோத்தியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை நாம் காணவிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானோருக்கு பெருமைக்குரிய நமது கலாச்சார பாரம்பர்யமாக இருக்கும் விஷயமாக அது இருக்கும்.
குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட, காலங்களைத் தாண்டி நிற்கும் ராமாயணத்தை நினைவுகூர்வதாக அந்த நிகழ்ச்சி இருக்கும். அது நமது ஒருங்கிணைந்த மன உணர்வுகளின் ஓர் அங்கமாகிவிட்டது. அனைத்து வகைகளிலும் முன்னுதாரணமாகத் திகழும், சிறந்த அடையாளமாக இருக்கக் கூடிய, அசாதாரணமானவரான, சீடர்களால் கடவுளாக மதிக்கப்படும், நேர்மையான மற்றும் பொறுப்பான சமூக நியதிகளை உருவாக்குவதற்கு அவசியமான மாண்புகளுடன் வாழ்ந்தவராக இருக்கும் ராமருக்கு கோவில் கட்டும் ஆசியை நமக்கு அளிப்பதாக அந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது.
தன்னியல்பான கொண்டாட்டங்களுக்கான தருணமாக அது இருக்கப் போகிறது. ஏனெனில் கடந்த காலத்தின் பெருமைகளை நாம் உயிர்ப்பிக்கிறோம். நாம் போற்றி வரும் மாண்புகளைப் புனிதப்படுத்துகிறோம். ராமாயணத்தின் சாராம்சத்தை, சரியான கண்ணோட்டத்தில் அதைப் புரிந்து கொண்டு, தர்மம் அல்லது நியாயத்தின்படியான வாழ்க்கை என்ற இந்தியாவின் லட்சிய நோக்கு எப்படி தனித்துவமானதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், சமூகத்தில் ஆன்மிக புத்துணர்வாக்கம் செய்யக் கூடியதாக இது இருக்கும்.
தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளின் கலாச்சாரத்தில் கவனத்தை ஈர்க்கக் கூடிய மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ராமாயணத்தில் தொலைநோக்கு சிந்தனைகள் புதைந்துள்ளன. இந்திய புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள ராமாயணத்தின் சிந்தனைகள், அடிப்படையில் மதச்சார்பற்றவை, குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனையில் அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வேதம் மற்றும் சமஸ்கிருத அறிஞரான ஆர்தர் அந்தோணி மெக்டோனெல் கூறியுள்ளார்.
நிறைய கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், நாட்டியக்காரர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கற்பனைகளில் ராமாயணம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, ஜாவா, பாலி, மலேயா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் போன்ற தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளிலும் இந்தத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில், அவர்களின் மன்னர்களுக்கு ராமரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 14வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அந்த சாம்ராஜ்யத்தின் தலைநகரம் அயுத்தயா என பெயரிடப்பட்டது.
தாய்லாந்தில் ராமகியெனின், கம்போடியாவில் ரீயம்கெர் என்ற பெயர்களில் வெவ்வேறு வகையில் ராமாயணம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவில், ஜவானிஸ் ககவின் ராமாயணம், பாலியில் ராமகவகா, லாவோ மொழியில் ஃபிரா லக் ஃபிரா லாம், மலேசியாவில் ஹிகயத் செரி ராமா, மியான்மரில் யம ஜட்டாவின், பிலிப்பின்ஸில் மஹராடியா லவனா, நேபாளத்தில் பானுபக்த ராமாயணம் என்ற பெயர்களில் ராமாயணம் சொல்லப் பட்டிருக்கிறது. சீனாவில் ராமரின் ஜட்டக்கா கதைகள், லியுடூ ஜி ஜிங் மற்றும் ஜப்பானிய மக்கள் மத்தியில் ஹோபுட்சுஷு' மற்றும் சம்போ-எக்கோடோபா' என ராமாயணம் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் ராமாயணம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அறிய முடிகிறது. அலெக்சாந்தர் பரணிகோவந்த் என்பவர் இதை ரஷிய மொழியில் மொழி பெயர்த்தார். ஜென்னடி பெச்சினிகோவ் இதை நாடகமாக உருவாக்கினார். நாடகக் கலைஞரான அவர் இதன் மூலம் பெரிதும் பிரபலமானார். அங்கோர்வாட் வளாகத்தில் ராமாயணத்தை நினைவூட்டும் காட்சிகள், இந்தோனேசியாவில் பிரம்பணன் கோவிலில் உள்ள புகழ்பெற்ற ராமாயண காட்சிகள் ஆகியவை, பூகோள, மத எல்லைகளைக் கடந்து ராமாயணம் எந்த அளவுக்கு கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
புத்த மதம், ஜெயின் மதம், சீக்கிய மதம் போன்ற பிற மதங்களாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் ராமாயணம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ராமாயணம் பல்வேறு மொழிகளில், பல்வேறு வகைகளில் கூறப்பட்டுள்ளது என்பதில் ஆச்சர்யம் எதுவும் கிடையாது. இதன் அடிப்படை அம்சத்திலும், பன்முகத்தன்மை கொண்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான விவரிப்புகளும் ஏதாவது ஒரு வகையில் மக்களை ஈர்த்தன. மலைகளும், நதிகளும் உள்ள காலம் வரையில் ராமாயணத்தின் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பு நீடித்து நிலைத்திருக்கும் என்று நாரதமுனி கூறிய வார்த்தைகள் முழுக்க முழுக்க உண்மையானவையாக உள்ளன.
ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் இந்தியாவின் வடக்கில் உள்ள அயோத்தியில் இருந்து தெற்கில் உள்ள இலங்கைக்கு நடந்து சென்ற வழியில் நடந்த விஷயங்களை விவரித்த முறையில், மாண்பான நெறிமுறைகளில் முக்கியமான விஷயங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பது தான் இதன் மிகச் சிறந்த அம்சமாக உள்ளது.
குறைசொல்ல முடியாத குணாதிசயங்கள் கொண்ட, நன்கு கற்றுத் தேர்ந்த, அன்பான, எதையும் சந்திக்கக் கூடிய, எப்போதும் உயிரினங்களின் மீது அன்பு கொண்ட யாராவது இருக்கிறார்களா என்று நாரத முனிவரிடம், கவிஞர் வால்மீகி கேட்பதில் இருந்து ராமாயணம் என்ற இதிகாசம் தொடங்குகிறது. மிகவும் பொருத்தமான தகுதிகளுடன் கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது என்றாலும், இந்த அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒருவர் இருக்கிறார் என்று நாரதர் விளக்குகிறார். அதுதான் ராமர் என்கிறார். அவரிடம் ஏராளமான நல்ல குணங்கள் உண்டு என்றாலும், எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது மற்றும் தர்மத்தை நிலைநாட்டுவது (Rakshitajeevalokasyadharmasyaparirakshita) ஆகியவற்றில் உறுதியான எண்ணம் கொண்டவராக இருந்தார் என்பது தான் முக்கியமானது என்று நாரதர் கூறுகிறார். உண்மையில், இதிகாசத்தின் பிற்பகுதியில், "RamovigrahavanDharmah" (தர்மத்தின் மறுபிறப்பு தான் ராமர் அல்லது நியாயம், உண்மை மற்றும் நீதியின் படியான செயல்பாடுகளின் மறுவடிவம் தான் ராமர்) என்று ராமரை ஒரு கதாபாத்திரம் வர்ணிக்கிறது. மனிதர்கள் தங்களிடம் வளர்த்துக் கொள்ள விரும்பும் மிக அருமையான தகுதிகளை ஒட்டுமொத்தமாகக் கொண்டவராக
ராமர் இருக்கிறார். இந்தத் தகுதிகளை விளக்கும் வகையில் பல காட்சிகள் ராமாயணத்தில் வருகின்றன. ராமாயணம் தொடங்கி, இந்தியா நெடுக அவருடைய பயணம் தொடரும் போது, உண்மை, அமைதி, கூட்டு உழைப்பு, கனிவு, நீதி, பங்கேற்பு, பக்தி, தியாகம், பரிதாபம் காட்டுதல் போன்ற மாண்புகளைப் பின்பற்றுவதற்கான உதாரணங்களை அவர் காட்டியுள்ளார். உலகத்தின் பார்வையில் இந்தியாவின் அடிப்படை மாண்புகளாக இந்த அம்சங்கள் தான் இருக்கின்றன. அவை எல்லாம் உலகெங்கும் உள்ளவை, காலங்களைக் கடந்தவை, எல்லைகளைக் கடந்தவை, இடைவெளிகளைக் கடந்தவையாக உள்ளன. அதனால் தான் இன்றைய காலக்கட்டத்திலும் பொருத்தமான வழிகாட்டுதலாக ராமாயணம் இருக்கிறது.
நன்கு நிர்வகிக்கப்படும் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் போது, ராமராஜ்ஜியம் போல இருக்க வேண்டும் என்று காந்திஜி கூறுவது வழக்கம். 1929ல் Young India பத்திரிகையில் இதுபற்றி எழுதிய அவர், எனது கற்பனையில் இருக்கும் ராமர் என்பவர் இந்தப் பூமியில் வாழ்ந்தாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. பழங்கால உதாரணமாக உள்ள ராமராஜ்ஜியம் என்பது தான் உண்மையான ஜனநாயகங்களில் ஒன்றாக இருக்கும். கடைக்கோடி குடிமக்களும், எந்த பெரிய நடைமுறை சிக்கல் மற்றும் செலவுகளும் இல்லாமல் விரைவாக நீதி கிடைக்கும் நிலையில் இருப்பது தான் அந்த ராமராஜ்ஜியமாக இருக்கும். ராமராஜ்ஜியத்தில் நாய்க்கும் கூட நீதி கிடைத்ததாக கவிஞர் விவரித்துள்ளார்.''
மக்களை மையமாகக் கொண்ட இந்த ஜனநாயக முறையிலான ஆட்சி நிர்வாகம் பரிவு, பங்கேற்பு, அமைதியாக ஒன்றுபட்டு வாழ்தல், குடிமக்களுக்கு தரமான வாழ்க்கையை உருவாக்கித் தருவதற்கான தணியாத தாகம் கொண்டதாக, நமது ஜனநாயகத்தின் வேர்களை ஆழமாகக் கொண்டு செல்வதற்கான கைகாட்டியாக, உத்வேகம் தரும் வகையில் செயல்படுவதாக உள்ளது. நமது அரசியல், நீதி மற்றும் நிர்வாக நடைமுறைகளை பலப்படுத்துவதற்கு அது நமக்கு உதவியாக இருக்கும்.
Recommended Video
இந்த நல்ல தருணத்தில், ராமருக்கு நாம் ஒரு புதிய கோவிலைக் கட்டும் போது, ராமாயணம் சொல்லும் செய்தியை நாம் புரிந்து கொண்டு, பரப்புவது நல்லது. சிறப்பான இந்த இதிகாசத்தின் சிறப்புகளைப் புரிந்து கொண்டு, அதன் அடிப்படை மாண்புகளின் அடிப்படையில் நம்முடைய வாழ்வை வளமாக்கிக் கொள்வது நல்லதாக இருக்கும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.