அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கொளுத்த போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கடலூர், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 11 செமீ மழை பெய்தது. கடலூர் காட்டுமயிலூரில் 10 செமீ மழையும், வேப்பந்தட்டை, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தலா 9 செமீ மழையும் பெய்தது.

மதியம் 1 மணி வரை
இன்று காலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று மதியம் ஒரு மணி வரை ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்பதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்பதாலும் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இன்று சனிக்கிழமை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று சென்னையை பொறுத்தவரை இன்று சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று வெப்பநிலை 35 - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் 151.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பான மழையை விட 13% குறைவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications