அடுத்த 3 மணி நேரம்! மழை விடாது.. சென்னையிலும் இடி, மின்னலுடன் வெளுக்கும்.. 21 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்டும், சென்னை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. இந்த சூழலில் தான் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தென்காசி உள்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

21 மாவட்டங்களுக்கு அலர்ட்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, கோவை, கிருஷ்ணகிரி, தென்காசி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இடி, மின்னலுடன் மழை கொட்டும்
தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று புதன்கிழமை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள்
நாளை வியாழக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையிலும் மழை கொட்டும்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications