4 மாவட்ட மக்களே எச்சரிக்கையாக இருங்க.. மிக கனமழை நாளையும் தொடருமாம்.. சென்னை வானிலை மையம்
சென்னை: நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் 15 மணி நேரமாக பெய்து வரும் மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட 4 மாவடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையை மிதக்க வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்த பருவமழை தற்போது மீண்டும் தீவிரம் பெற்றுள்ளது. குறிப்பாக தலைநகர் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழையை பெற்றது. இதனால், சென்னை மாநகரமே தத்தளித்தது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதன்படி, இன்று தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் குறிப்பாக கடந்த 15 மணி நேரமாக நிற்காமல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இடையிடே கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தென் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு 20 செ.மீ மழை கூட பதிவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தப்படி பல இடங்களில் மழை பெய்துள்ளது.
நாங்குநேரியில் 18 செமீ மழை: இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் கூட இந்த முறை அதிக அளவு மழை பெய்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக அதிக மழைப்பொழிவை பெறாத தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செமீ மழை பெய்தது. இதேபோல் ராதாபுரத்தில் 19 செமீ மழையும், நாங்குநேரியில் 18 செமீ மழையும் கடந்த 6 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
இதனால் சென்னையில் ஏற்பட்டதை விட அதிக மழை பொழியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையமும் நாளை இரவு வரை இந்த 4 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக நாளை நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்: இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும் என்று "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும்.
சென்னையில் எப்படி?: இதேபோல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதேபோல், நாளை தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications