கேரளாவில் வெளுத்து வாங்கும் மழை.. ஆறுகளில் தெறி வெள்ளம்.. ஆரஞ்ச் அலர்ட்... நிரம்பும் அணைகள்
திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. மிக கனமழை எச்சரிக்கையாக 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நடப்பாண்டு 8 நாட்கள் தாமதமாக தொடங்கினாலும் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. பருவமழை பொய்த்துப்போனதோ என்று பலரும் கவலையடைந்தனர். அணைகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. மழை பெய்ய வேண்டி மும்மத பிரார்த்தனையும் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை சீசனில் அதி கனமழைக்கான முதல் ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பல்வேறு அணைகள் திறக்கப்பட்டுள்ளன. பத்தனம்திட்டாவில் மணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால் பம்பை மற்றும் கக்கட்டாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கியில் உள்ள கல்லாகுட்டி அணையின் 2 ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பாம்பிளா அணை விரைவில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரியாறு மற்றும் முத்திரப்புழா கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் மற்றும் குட்டநாடு தாலுகாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் கல்லூரிகள் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி., கண்ணூர் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் மாற்றப்பட்டுள்ளன.
இதனிடையே புதன்கிழமையான இன்று திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான எச்சரிக்கை காரணமாக கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. கேரளா மாநிலத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications